Categories: தமிழகம்

ஒரு லிட்டர் பால் ரூ.72ஆக உயர்வு.. தமிழக மக்கள் அதிர்ச்சி!

பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான பால் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டே வரும் நிலையில் தற்போது தனியார் பால் விலை ஒரு லிட்டர் 72 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி தமிழக மக்களுக்கு கடும் அதிர்ச்சியாக உள்ளது.

தமிழகத்தில் ஆவின் பால் விலை கடந்து சில நாட்களுக்கு முன்னால் உயர்த்தப்பட்டது என்பதும் ஆரஞ்சு பால் மட்டும் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டது என்பது தெரிந்ததே. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தற்போது தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா ஆகிய பால் நிறுவனங்கள் பால் விற்பனையை செய்து வரும் நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

பால் மற்றும் தயிர் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானதில் இருந்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பால் பாக்கெட்டுகளை பொருத்தவரை மூன்று வகையாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 52 ரூபாய் எனவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 50 ரூபாய் எனவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் 64 ரூபாய் எனவும், கொழுப்பு பால் லிட்டருக்கு 72 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தயிர் பாக்கெட்டுகளின் விலை 74 என உயர்த்தப்பட்டுள்ளது.

தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது பாலின் விலையை அதிகரித்து வருவதும் இதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதும் கண்டனத்திற்குரியது என அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனியார் பால் விலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தனியார் பால் பாக்கெட்டுகள் கடந்த ஆண்டில் மற்றும் நான்கு முறை உயர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே உயர்த்திவிட்ட நிலையில் இன்னும் இந்த ஆண்டில் எத்தனை முறை உயர்த்தப்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts