அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி இருக்கும் பூர்ணிமா ரவி…

‘அராத்தி’ என்ற யூ டியூப் சேனலின் மூலம் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. அவரது காணொளிகள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றது. பல குறும்படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதன் வாயிலாக வெள்ளித்திரையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ரியோ மற்றும் ரம்யா நம்பீசன் நடித்த ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்கு பிறகு 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் டிவியின் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். 96 நாட்கள் அங்கிருந்த பூர்ணிமா ரவி 16 லட்சத்துடன் வெளியேறினார். சமீபத்தில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக எம். எஸ். ராஜா எழுதி இயக்கிய ‘செவப்பி’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தில் ஐந்து வயது சிறுவனுடைய தாயாக நடித்திருந்த பூர்ணிமா ரவி உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸானது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி இருக்கும் பூர்ணிமா ரவி, ‘செவப்பி’ திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தனது திறமையான நடிப்பால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தற்போது தன்னை முதன்மைப்படுத்திக் காட்டும் நிறைய பட வாய்ப்புகள் வருகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு, நடிகர் தனுஷ் என்று பதிலளித்தார். நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்வார், அவ்வளவு அர்ப்பணிப்புடன் வேலை செய்வார். அவரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டுள்ளேன். அவரைப் போலவே கடின உழைப்பினால் எனக்கென ஒரு இடத்தை உருவாக்குவேன் என்று கூறினார். மேலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறேன், தொடர்ந்து என்னை வெள்ளித்திரையில் காணலாம் என்று தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews