ரஜினிகாந்த் அப்படி சொன்னது எனக்கு பிடிக்கல.. இரண்டு படம் பண்ணிய சூப்பர்ஸ்டாரை விமர்சித்த ப. ரஞ்சித்

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ப. ரஞ்சித். சினிமாவில் யாரும் பேசாத அரசியலை தனது அறிமுக படமான அட்டகத்தி மூலம் பேசிய ரஞ்சித், இதன் பின்னர் கார்த்தியின் நடிப்பில் மெட்ராஸ் என்ற படத்தை இயக்கி இருந்தார். இரண்டு படங்களில் தமிழ் சினிமாவில் யாருமே சொல்லாத ஒரு களத்தை எடுத்து பேசியதுடன் ஒரு வித தாக்கத்தையும் அவர் உண்டு பண்ணி விட்டார்.

விளிம்பு நிலை மக்களின் குரலாக திரையில் ஒலித்து வரும் இயக்குனர் ப. ரஞ்சித், இதன் பின்னர் தனது மூன்றாவது மற்றும் நான்காவது படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தார். கபாலி, காலா என இரண்டு படங்களில் ரஜினியை முன் பின் பார்த்திடாத வகையில் முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் ரஜினிகாந்த் நடிப்பை வெளிப்படுத்த, படமும் நல்ல பெயர்களை எடுத்திருந்தது.

இதற்கடுத்து ஆர்யாவின் நடிப்பில் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்த ப. ரஞ்சித், அடுத்ததாக தங்கலான் என்ற பிரம்மாண்ட படத்தை தனது ஸ்டைலில் உருவாக்கி உள்ளார். இந்த படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுதந்திரத்திற்கு முன்பாக கேஜிஎஃப் எப்படி இருந்தது என்பதை பேசும் படமாக இருக்கும் என்பது டீசர் மூலம் தெரிய வருகிறது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் கருத்து பற்றி ப. ரஞ்சித் விமர்சனம் கூறிய விஷயம் தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் விழா இன்று நடைபெற்ற நிலையில், இதற்காக இந்தியாவில் உள்ள பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, தனது படத்தில் நடித்த ரஜினிகாந்த் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது பற்றி பேசிய ப. ரஞ்சித், “அவர் அங்கே சென்றது அவருடைய விருப்பம். ஏற்கனவே இது பற்றி ரஜினி பேசியிருந்த போது, 500 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பிரச்சனை தீர்வுக்கு வந்துவிட்டதாக கூறி இருந்தார்.

ஆனால் அதன் பின்னால் உள்ள அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டி உள்ளது. சரியா, தவறா என்பதை மீறி அவரது கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது உண்மை தான்” என வெளிப்படையாக பேசி உள்ளார்.

Published by
Ajith V

Recent Posts