28 வருஷம் செய்தி வாசித்து பெயர் எடுத்தவருக்கு.. பாலச்சந்தர் கொடுத்த புது வாழ்க்கை.. சினிமாவில் சாதித்தது எப்படி?..

காலம் போன போக்கில் அலைந்து திரிந்தவர்களில் இருந்து வேறு துறையில் சாதித்த பலரும் கூட ஏதோ இயற்கையின் விளையாட்டால் சினிமாவில் சாதித்து உள்ளனர். அப்படி செய்தி வாசிப்பாளர்களாக இருந்த பலரும் கூட சினிமாவில் பெரிய ஆளாகவும் உயர்ந்துள்ளனர். பாத்திமா பாபு, பிரியா பவானி சங்கர் என செய்தி வாசித்த சிலர் தமிழ் திரை உலகில் பல படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததே.

அந்த வகையில், தொலைக்காட்சியில் 28 வருடங்களாக செய்தி வாசித்த ஒருவர் நடிகராக மாறியதை பற்றி தற்போது காணலாம். சென்னையை சேர்ந்த டி வி வரதராஜன் தொலைக்காட்சியில் 28 வருடங்கள் செய்தி வாசிப்பாளராக இருந்தார். தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு காரணமாக அவர் வாசிக்கும் செய்தியை பொதுமக்கள் விரும்பி கேட்டனர்.

செய்தி வாசிப்பாளராகும் முன்னர் அவர் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரிந்தார். செய்தி வாசித்துக் கொண்டிருந்த வரதராஜனுக்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ஒய்ஜி மகேந்திரன் நாடக கம்பெனியில் அவர் சில நாடகங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி அவர் சொந்தமாகவே ஒரு நாடக கம்பெனியையும் நிறுவி அதன் மூலம் பல நாடகங்களை நடத்தினார். குறிப்பாக ’இலவச இணைப்பு’ என்ற நாடகம் மயிலாப்பூர் அகாடமியில் ஆறு விருதுகளை பெற்றிருந்தது.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவரை தொலைக்காட்சி சீரியலுக்கு கொண்டு வந்தவர் தான் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர். ஏற்கனவே தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக் கொண்டிருந்ததால் சீரியல் நடிப்பதில் அவருக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை.

பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான பிரேமி, கையளவு மனசு, காதல் பகடை போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தார். மேலும் ’இது நம்ம நாடு’ என்ற அரசியல் சம்பந்தப்பட்ட நாடகத்தில் அவர் நடித்தார்.

மேலும் டிவி வரதராஜன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மோகன் நடித்த ’அந்த சில நாட்கள்’ விசு நடித்து இயக்கிய ’பட்டுக்கோட்டை பெரியப்பா’ ரஜினிகாந்த் நடித்த ’அருணாச்சலம்’ அஜித், ஐஸ்வர்யாராய் நடித்த ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தில் அவர் பேட்டி எடுக்கும் பத்திரிகையாளராகவே நடித்திருப்பார்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான பெண், தாமரை போன்ற சீரியல்களிலும் ஜெயா டிவியில் ஒளிபரப்பான அண்ணி சீரியல்களில் நடித்ததில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்து மிகப்பெரிய புகழ் பெற்ற டிவி வரதராஜனின் நடிப்பை ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது.

Published by
Bala S

Recent Posts