பொழுதுபோக்கு

இனி சினிமாவில் மட்டுமல்ல… தொழிலிலும் கோடிகளை குவிக்க உள்ள நயன்தாரா!

லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்று உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா, தொழில் முதலீடுகளிலும் ஆர்வமுடையவர். அவர் தற்போது சொந்தமாக ஒரு பியூட்டி பிராண்டை ஆரம்பித்துள்ளார். அந்நிறுவனம் செப்., 29 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

2005ல் சரத்குமாரின் ஐயா படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நயன்தாரா, இதுவரை இந்த 18 ஆண்டுகளில் 80 படங்கள் வரை தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்துள்ளார். தற்போது ஷாரூக் கானின் ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் அட்லியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் 10 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் ஒரே நடிகை என்ற பெருமையும் இவரையே சேரும்.

திரைத்துறை வாழ்க்கையில் மட்டுமின்றி குடும்ப வாழ்க்கையும் அவருக்கு நிறைவாக அமைந்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் லிவிங் ரிலேஷனில் இருந்தவர், 2022 ஜூனில் அவரை மணமுடித்தார். இத்தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அவர்களுக்கு உயிர், உலகு என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட்டில் நுழைந்த கையோடு, பாலிவுட் நடிகைகள் போல் அழகுசாதனப் பொருட்கள் தொழிலில் இறங்கிவிட்டார் நயன்தாரா. பாலிவுட்டில் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைஃப் ஆகியோர் தங்களுக்கென பியூட்டி பிராண்டுகள் வைத்து கோடிகளில் வருமானம் பார்க்கின்றனர். அதே பாணியில் நயன்தாரா 9ஸ்கின் என்ற பெயரில் தனது பிராண்டை தொடங்கியுள்ளார்.

இவர் இதற்கான பணிகளை 6 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டதாகவும், உலகத் தர தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்கை பொருட்கள் இணைத்து சருமப் பராமரிப்புப் பொருட்களை உருவாக்கியுள்ளதாக இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார். செப்., 29 அவரது இணையதளம் விற்பனையைத் துவங்கும். தென்னிந்திய அழகுசாதன மார்க்கெட்டை இவர் கணிசமாக கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Nithya

Recent Posts