திரைத்துறையில் நகைச்சுவை மன்னன் என்றும் பல்துறை வித்தகர் என்றும் போற்றப்பட்டவர் நாகேஷ். நகைச்சுவை மட்டும் அல்லாது கதாநாயகனாக வில்லனாக குணச்சித்திர நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று திறம்பட நடித்தவர் நாகேஷ். சினிமா துறையில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து இன்றும் பலரது மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்.
நாகேஷ் 1959 ஆம் ஆண்டு வெளியான தாமரைக்குளம் படத்தின் மூலமாகத்தான் முதல் முதலாக திரைத்துறையில் அறிமுகமானார். சினிமா உலகில் உருவ கேலியை முதலில் அனுபவித்தவர் இவர் தான் என்று கூறலாம். அந்த காலகட்டத்தில் நடிகர்கள் அழகை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் முகம் முழுவதும் அம்மை தழும்புகள் புகையிலை போட்டது போன்ற வாய் உள்ளிட்டவற்றுடன் திரைத்துறைக்கு வந்தவர் தான் நாகேஷ்.
இதனால் ஆரம்ப கட்டத்தில் ஏராளமான நிராகரிப்புகளையும் அவமானங்களையும் நாகேஷ் அவர்கள் சந்தித்துள்ளார். ஆனால் நாகேஷ் அவர்களுக்குள் ஒரு கலைஞன் இருக்கிறான் என்பதை கண்டுபிடித்தவர் யார் என்றால் அது கே.பாலசந்தர் தான். நாடகத்தின் மீது அதீத பற்று கொண்ட கே.பாலசந்தர் அவர்களின் கண்களில் நாகேஷ் தென்பட்டுள்ளார். வித்தியாசமான தோற்றத்துடன் இருக்கும் நாகேஷை பற்றி விசாரித்த போது அவர் நன்றாக நகைச்சுவை செய்வார் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து நாகேஷ் அவர்களிடம் நடித்துக் காட்டும்படி கே.பாலசந்தர் கேட்க சிறிதும் தாமதிக்காமல் நகைச்சுவையாக நடித்துக் காட்டியுள்ளார். அதை பார்த்து கே.பாலசந்தர் அவர்கள் அதிக நேரம் சிரித்ததாக மூத்த செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு நாகேஷ் அவர்கள் மிக பெரிய கலைஞர் என்று கூறி கே.பாலசந்தர் நாடகங்களில் நடிக்க வைத்துள்ளார்.
சினிமாவில் முன்னேறும் வெறி
அதன்பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கிய போது பல்வேறு எதிர்மறையான கருத்துக்களை நாகேஷ் அவர்கள் சந்தித்துள்ளார். அப்போது தனக்காக பலர் காத்திருக்க வேண்டும். அந்த அளவிற்கு திரைத் துறையில் முன்னேற வேண்டும் என்று நாகேஷ் முடிவு எடுத்துள்ளார். அதற்காக வெறித்தனமாக நடிக்க துவங்கிய நாகேஷுக்கு அவர் நினைத்ததும் ஒரு கட்டத்தில் நடந்தது.
சர்வர் சுந்தரம் படத்திற்கு பிறகு அவருக்கென்று தனி ரசிகர்கள் உருவாகினர். இதனால் பல படங்களில் நாகேஷ் அவர்கள் நடிக்கத் தொடங்கினார். அவரது நடிப்புத் திறமையால் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிய தொடங்கி எத்தனையோ கால்ஷீட்டுகள் என படு பிஸியாக இருந்த நாகேஷ்காக பல முன்னணி நட்சத்திரங்களும் காத்திருந்தனர்.
சிங்கிள் டேக்கில் கலக்கிய நாகேஷ்
இதனால் தூங்குவதற்கு கூட நேரம் இல்லாமல் தவித்த நாகேஷ் மது அருந்த தொடங்கியுள்ளார். ஆனாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் நாகேஷ் அவர்களுக்கு சிங்கிள் டேக் போதும் அந்த அளவிற்கு நடிப்புத் திறமையை வளர்த்திருந்தார். அதற்கேற்றார் போல் ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவை மன்னன் நாகேஷ் இன்றளவும் நிலைத்து நிற்கிறார்.