உங்களுக்கு எதுக்கு இரண்டு மைக்..? ‘எங்க வீட்டுப் பிள்ளை’ வெற்றி விழாவில் நம்பியாரின் கேள்விக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அசத்தல் பதில்!

தமிழ் சினிமாவில் உச்ச ஹீரோக்களாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இருந்தனர் என்றால் அவர்களுக்கு ஹீரோ அந்தஸ்து கொடுக்கக் காரணமான மற்றொரு மகா கலைஞன் தான் நம்பியார். இவர்கள் இருவரின் படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திற்கென்றே பிறந்தவர் என்பது போல நடிப்பில் வெளுத்து வாங்கி விடுவார்.

நம்பியார் என்றாலே உதட்டைப் பிதுக்கி, விழிகளை உருட்டி, உள்ளங்கைகளைத் தேய்த்து, ‘‘டேய்.. மொட்ட..’’ என்று அடியாளைக் கூப்பிடும் கொடூரமான பிம்பம்தான் வெகுமக்கள் மனத்தில் பதிந்துள்ளது. ஆனால் உண்மையில் நம்பியார் கலகலப்பானவர்! படப்பிடிப்பின்போதும் சரி, வெளியிலும் சரி. அவரது நகைச்சுவையால் அவர் இருக்கும் இடத்தில் எல்லாரும் சிரித்த முகத்துடன்தான் இருப்பார்களாம்.

‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். – நம்பியார் நட்பு கடைசி வரை பிரிக்க முடியாத உறவாக இருந்தது. எம்.ஜி.ஆருக்குப் பல படங்களில் ஆஸ்தான வில்லன் நம்பியார்தான். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் வரை சினிமாவில் இவர்கள் உறவு தொடர்ந்தது.

படத்தின் தலைப்பைக் கேட்ட உடனே ஒப்புக் கொண்ட ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த சூப்பர் ஹிட் படம்

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். படத்தில் வில்லனாக இருக்கும் அவரது அத்தான் நம்பியார் கடைசியில் மனம் திருந்துவார். பல திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடி எம்.ஜி.ஆர். திரையுலகில் இருந்தவரை தகர்க்க முடியாத சாதனை படைத்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்துக்கு சென்னையில் வெற்றி விழா நடத்தப்பட்டது.

இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலைஞர்கள் பேசி முடித்தபின் கடைசியாக எம்.ஜி.ஆர். பேச வந்தார். அப்போது அவரது பேச்சு மக்களுக்குத் தெளிவாகக் கேட்பதற்காக ஏற்கெனவே இருந்த ‘மைக்’குடன் கூடுதலாக இன்னொரு ‘மைக்’ வைக்கப்பட்டது. உடனே சட்டென மேடையில் நாற்காலியில் அமர்ந்திருந்த நம்பியார், ‘மைக்’ அருகே வந்தார்.

‘‘இது என்ன அநியாயம்… நாங்கள் பேசும்போது ஒரு ‘மைக்’தான் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு ‘மைக்’குகளா?’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் நம்பியார் எழுப்பிய கேள்வியால் கூட்டம் கலகலத்தது. எம்.ஜி.ஆர். மட்டும் என் சும்மாவா? ‘‘படத்தில் எனக்குத்தான் இரட்டை வேடம். அதனால்தான், இரண்டு ‘மைக்’குகள் எனக்கு’’ என்று தனது பாணியில் சிரித்தபடி எம்.ஜி.ஆர். பதிலளிக்க, கூட்டத்துடன் சேர்ந்து நம்பியாரும் ஆரவாரம் செய்தாராம்.

நம்பியாரின் ஜாலியான பேச்சுக்கு எம்.ஜி.ஆரும் ஈடுகொடுத்துப் பேசுவது வழக்கமாம். இதனால் அவர்கள் இருக்கும் இடம் எப்போதுமே கலகலப்பாக இருக்குமாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews