பிரேமலு புகழ் மமிதா பைஜூவுக்கு இயக்குனர் பாலாவால் நேர்ந்த துயரம்.. சூர்யா கண் முன் நடந்த சம்பவம்..

கடந்த சில தினங்களாக மலையாள திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது பற்றி தான் இணையத்தில் அதிகம் கருத்துக்கள் வைரலாகி வருகின்றன. பிரேமலு, பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் என ஒவ்வொரு திரைப்படங்களும் ஒவ்வொரு ஜானர் வகையில் அசத்தலாக ரிலீசாகி இருப்பதால் கேரளாவை தாண்டி தமிழ்நாடு, பெங்களூர் என பல இடங்களிலும் இந்த படங்களை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இதில் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் என்றால் பிரேமலுவை சொல்லலாம். காதல், காமெடி, நட்பு, எமோஷன் என அனைத்தும் கலந்து மிகப்பெரிய எண்டெர்டெயினர் படமாக வெளியானதால் ரசிகர்களும் இதனை மிகுந்த ஆர்வத்துடன் திரும்பத் திரும்ப பார்த்து வருகின்றனர். அதிலும் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்த நஸ்லீன் மற்றும் நாயகி மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

அதிலும் சூப்பர் சரண்யா மூலம் கேரளாவை தாண்டி பிரபலமான நடிகை மமிதா பைஜூவிற்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் சமீபத்தில் இயக்குனர் பாலா பற்றி தெரிவித்த கருத்து ரசிகர்கள் மத்தியில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் அருண் விஜய்க்கு முன்பாக சூர்யா மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் இந்த திரைப்படம் கைவிடப்பட பின்னர் அருண் விஜய் நடிப்பில் படத்தை மீண்டும் இயக்கியிருந்தார் பாலா.

அப்படி இருக்கும் நிலையில் தான் நாயகியாக நடித்த மமிதா பைஜூ, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “வில்லடிச்சான் பாட்டில் நான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்கு அதை எப்படி வாசிக்க வேண்டும் என்பது தெரியாது. அந்த காட்சியின் படி, நான் வில்லடிச்சான் பாட்டில் அதிக அனுபவமுள்ள ஒருவராக இருக்க வேண்டும் என்பதால் அதனை சிறப்பாக செய்ய வேண்டும். இது பற்றி சுத்தமாக தெரியாது என்ற நிலையில், டேக் ரெடி என பாலா சொன்னார். நான் 3 டேக்குகள் பார்த்து விட்டு தயாரானேன்.

நான் செட்டில் சில சமயம் கோபப்படுவேன், ஆனால் அதை அப்போதே மறந்து விடுங்கள் என பாலா என்னிடம் கூறி இருந்தார். என் பின்னால் சில முறை அடிக்கவும் செய்திருந்தார் பாலா. சூர்யா ஏற்கனவே அவர் படத்தில் பணிபுரிந்திருந்ததால் அவருக்கு பாலா பற்றி ஏற்கனவே தெரியும்” என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தான் சூர்யா மற்றும் மமிதா பைஜூ ஆகிய இருவருமே படத்தில் இருந்து விலகியிருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

பரதேசி படம் ரிலீசான போது இது போன்று பல கருத்துக்கள் பாலாவை சுற்றி வலம் வந்திருந்த நிலையில், தற்போது இளம் மலையாள நடிகை ஒருவர் இப்படி தெரிவித்துள்ளது பூதாகரமாகவும் வெடித்துள்ளது.

Published by
Ajith V

Recent Posts