ரியல்மி இந்தியா சி.இ.ஓ மாதவ் ஷேத் திடீர் விலகல்.. என்ன காரணம்?

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனத்தின் இந்திய பிரிவு சி.இ.ஓ ஆக பணிபுரிந்த மாதவ் ஷேத் என்பவர் திடீரென தனது பதவியை விட்டு விலகி உள்ளார் என்ற தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி இந்தியாவிலிருந்து விலகுவதாக மாதவ் ஷேத் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். ரியல்மி இந்தியாவின் சி.இ.ஓ பதவியில் இருந்த அவர் கடந்த ஆண்டு வணிக மற்றும் கார்ப்பரேட் துணை தலைவராக மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ரியல்மி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய அவர் திடீரென விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரியல்மி தயாரிப்புகள் இந்தியாவின் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையவும் உலக அளவில் விற்பனை வளர்ச்சி அடையவும் மாதவ் ஷேத் முக்கிய பங்காற்றிய இருந்த நிலையில் அவர் விலகி இருப்பது அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்ற கருதப்படுகிறது.

இந்நிலையில் மாதவ் ஷேத் தனது விலகல் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “ரியல்மியில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான நேரம் இது. ரியல்மி எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து பிராண்டை வளர்த்து, அதன் விற்பனை பெருகுவதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

மாதவ் ஷேத் விலகல் குறித்து ரியல்மி செய்தி தொடர்பாளர் கூறியபோது, ‘மாதவ் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய எங்கள் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் மாதவனிடம் விடைபெறும்போது, ரியல்மியின் செயல்பாடுகள் தடையின்றி தொடரும் என்பதை எங்கள் வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம். உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம், பிராண்டை முன்னோக்கி கொண்டு செல்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Published by
Bala S

Recent Posts