சினிமாவில் மட்டும் ஹீரோவாக விளங்கும் பல ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகத் திகழும் ஒரு நடிகர் ராகவா லாரன்ஸ்தான். அவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரம் நடத்தி வருவதோடு, அவர் எடுக்கும் பல படங்களில் ஆதரவற்றோர், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பட வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.
மனித ஜீவன்கள் எங்கு தவித்தாலும் உதவிக்கரம் நீட்டும் முதல் நபராக இருப்பவர் லாரன்ஸ் அவர்கள்தான். இவர் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 4 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.
இந்தநிலையில் லாரன்ஸின் தாயார் மது பிரியர்களின் புகைப்படத்தினைக் காட்டி, இவர்களுக்கு உதவி செய்வது வீணே என்று கூறியதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதாவது, “தமிழ்நாட்டில் சில தினங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் நிரம்பும் கூட்டங்களைப் பார்த்து என் அம்மா, நாம் கடினமாகப் போராடி ஏன் இதுபோன்ற பொறுப்பற்ற மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று கேட்டுள்ளார்.
என் அம்மா மட்டுமின்றி என்னுடைய நண்பர்களும் இதையே தான் கேட்டுள்ளனர், அவர்களுக்கு மட்டும் அல்ல உதவி செய்யும் பலருக்கும் இதே கேள்விதான். ஆனால் உதவி செய்வோர்களுக்கு சொல்லும் வார்த்தை இதுதான்.
இதுபோன்ற மனிதர்களின் குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நான் நிச்சயம் எனது சேவையை எப்போதும் செய்வேன். ஆனால் மதுப் பிரியர்களும் குடிக்கும் முன் வீட்டில் உள்ள குழந்தைகளை நினைத்து பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்