கும்பம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

கோபுர கலசம் போல எப்போதும் புகழுடன் திகழும் கும்ப ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் ஏராளமான தெய்வீக அனுபவங்கள் கிடைக்க இருக்கின்றது. கடந்த ஒரு வருடமாக உங்களுக்கு ஏழரைச் சனியின் முதல் பகுதியான விரையச் சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் எவ்வளவு வருமானம் வந்தாலும் அது அப்படியே செலவாகி கொண்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு ராகுபகவான் வந்துவிட்டார். இது நன்மை தரும் இடமாகும். மற்ற ஜாதி, மதம் சார்ந்த நண்பர்களால் இந்த 18 மாதங்கள் உதவிகளும் நன்மைகளும் கிடைத்து கொண்டே இருக்கும்.

உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு கேது பகவான் வந்திருக்கிறார். ஒன்பதாம் இடத்திற்கு கேது வரும்பொழுது ஏராளமான ஆன்மிக பயணங்கள், சித்தர் தரிசனங்கள், துறவிகள், மகான்கள் உடைய ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபாடு செய்தல், அதன் மூலமாக குரு பலம் அதிகரித்தல் போன்ற சம்பவங்கள் நிகழும்.

அதேசமயம் உங்களுடைய அம்மா வழி முன்னோர்கள் மற்றும் அப்பாவின் முன்னோர்களுக்கு நீங்கள் தர்ப்பணம் செய்ய வேண்டியதை இந்த ராகு கேது பெயர்ச்சி நினைவூட்டுகிறது. உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானம் உங்களுடைய அப்பா ஸ்தானத்தை நினைவூட்டுகிறது. அங்கே வந்திருக்கும் கேது பகவான் உங்களுடைய அம்மா வழி முன்னோர்களை பற்றிய உங்களுடைய பிதுர் கடமைகளை ஞாபகப்படுத்துகிறது.

ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் அப்பாவின் முன்னோர்களும் அம்மாவின் முன்னோர்களும் தலைமுறைக்கு ஒருவர் வீதம் செயற்கையாக இறந்திருக்கலாம். அதாவது தற்கொலை செய்து இறந்திருக்கலாம் அல்லது கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது விபத்து, போரில் இறந்து இருக்கலாம். அவ்வாறு இறந்தவர்கள் யாருக்கும் மறுபிறவி கிடையாது. அவர்களுக்கு பசியும் தாகமும் கொண்ட பிரேத ஆத்மா பிறவிதான் இப்பொழுது இருக்கும். அவர்களுக்கு கதிமோட்சம் கொடுத்து மறுபிறவி கொடுக்கக்கூடிய பொறுப்பு இந்த பதினெட்டு மாதங்களுக்கு உங்களுக்கு இருக்கிறது. உங்களுடைய முன்னோர்களில் அவ்வாறு யாராவது இப்படி இறந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் விசாரித்து கண்டறிய வேண்டும். அவர்களுடைய பெயரை மட்டும் தெரிந்து கொண்டு அதன் பிறகு மூன்று கடல்கள் அல்லது மூன்று நதிகள் சந்திக்கக் கூடிய இடத்தில் திலா ஹோமம் அல்லது நவகலசயாகம் ஒரு முறை செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக உங்களுக்கு உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் வெகு விரைவில் நிறைவேறும். இந்த திலா ஹோமம் அல்லது நவகலசயாகம் செய்த 90 நாட்களுக்கு பிறகு நிறைவேறும் என்பது உறுதி.

மேலும் கும்ப ராசியில் பிறந்தவர்கள் தினமும் ஒருமணிநேரம் பின்வரும் பீஷண பைரவர் மந்திரத்தை ஜெபித்து வர வேண்டியது அவசியமாகும். அடுத்த 18 மாதங்களுக்கு இந்த பீஷண பைரவர் மந்திரம் ஜெபித்து வருவதன் மூலமாக 9ஆம் இடத்தில் உள்ள கேது பகவானால் ஏற்படக்கூடிய தொழில் தடை, ஆரோக்கிய பிரச்சனைகள், வருமான தடை, முன்னேற்றத் தடை போன்றவை பெருமளவில் விலகுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. கேது பகவானின் பிராண தேவதை பீஷன பைரவர் ஆவார். பீஷண பைரவர் உடைய காயத்ரி மந்திரத்தை நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக அடுத்த 18 மாதங்களில் அசைவம் சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது, போதைப் பொருட்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது. ஜீவகாருண்யம் என்று சொல்லக்கூடிய சைவ உணவு பழக்கத்தை பின்பற்றி கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பின்பற்ற முடிந்தவர்கள் மட்டும் பின்வரும் பீஷண பைரவர் மந்திரத்தை ஜெபிக்கலாம்.

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
சர்வானுக்ராய தீமஹி
தன்னோ பீஷன பைரவ ப்ரசோதயாத்
ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews