பொழுதுபோக்கு

கரகாட்டக்காரன் புகழ் கனகாவிற்கு இப்படியொரு நிலையா?… வீட்டிற்குள் கார்த்திருந்த அதிர்ச்சி!

கரகாட்டக்காரன் படத்தில் “மாங்குயிலே… பூங்குயிலே” என ராமராஜன் சுத்தி, சுத்தி வட்டமிட்டு பாடிய கனகா, இந்த படத்திற்கு பிறகு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வர ஆரம்பித்தார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கனகா, பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து கடைசியாக நடிகர் விவேக் உடன் ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் திரையுலகை விட்டு விலகிய கனகா, கணவருடன் செட்டில் ஆகியிருப்பார் என நினைத்த நிலையில், புற்றுநோய் ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இந்நிலையில், சமீபத்தில் அவர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து பல திடுக்கிடும் உண்மைகளை வெளியே கொண்டு வந்துள்ளது. சொத்து தகராறு காரணமாக அப்பாவை பிரிந்த கனகா, கணவரும் பிரிந்து சென்றதால் தனிமையில் வசித்து வருகிறார்.

கடந்த வியாழக்கிழமை அன்று தீயணைப்புத்துறையினருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் கனகா வீட்டில் தீப்பிடித்து கரும்புகை வருவதாக அவர் வசிக்கும் தெருவிலுள்ள அக்கம் பக்கத்தினர் கூறவே அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கனகாவின் வீட்டில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. ஆனால் கனகா தீயணைப்புத்துறையினரை உள்ளே அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கனகாவை சமாதானம் செய்த தீயணைப்புத்துறையினர் அவருடைய அனுமதியோடு உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். பாழடைந்து காட்சியளிக்கும் கனகாவின் வீட்டிற்குள் எங்கு பார்த்தாலும் குவியல் குவியலாக குப்பைகளும், துணிகளும் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒருவழியாக தீயைக் கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறையினர், கனகாவின் தனிமை வாழ்க்கையைக் கண்டு வேதனை அடைந்துள்ளனர்.

ஆம், கனகா வீட்டை விட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்துள்ளதோடு, அண்டை வீட்டரின் தொடர்பையும் முற்றிலும் முறித்துக்கொண்டதாக தெரிகிறது. தனிமை விரும்பியாக படையப்பா நீலாம்பரி போல் பூட்டிய வீட்டிற்குள் வசித்து வரும் கனகா, ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு வருவதாகவும், அடுத்தடுத்து சொந்த வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களால் அவரது அம்மா வாங்கிய வீட்டில் தனிமையில் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது.

சினிமாவில் கொடிகட்டி பறந்த கனகா, இப்போது சொத்து, சொகுசு கார் என அனைத்தும் இருந்தாலும் அன்பும், அரவணைப்பும் இல்லாததால் திரையுலகில் ஓரங்கட்டப்பட்ட சோகத்துடன் தனிமையில் வசித்து வருவது அவரது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Published by
Amaravathi

Recent Posts