பொழுதுபோக்கு

இளையராஜா அவர்கள் கேட்கிறது நியாயமான உரிமை… சீமான் பேச்சு…

நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் அவர்கள் தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் எனவும் தமிழ் நமது உயிர் மூச்சு எனவும் தமிழ் தேசியம் பற்றி பேசுபவர். இவரது பேச்சினை கேட்டுக் கொன்டே இருக்கலாம். இவரது பேச்சுக்காகவே ரசிகர்கள் உண்டு.

ஆரம்பத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். சில திரைப்படங்களின் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார். 1996 ஆம் ஆண்டு ‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

பிரபு மற்றும் மதுபாலா ஆகியோர் நடித்த ‘பாஞ்சாலங்குறிச்சி’ நல்ல வரவேப்பைப் பெற்றது. முதல் படமே வெற்றிப் படமாக சீமான் அவர்களுக்கு அமைந்தது. இப்படத்தின் பாடல்களும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து இனியவளே (1998), வீரநடை (2000), தம்பி (2006), வாழ்த்துக்கள் (2008) ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் சீமான்.

இது தவிர, ‘பள்ளிக்கூடம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘தவம்’, ‘எவனோ ஒருவன்’, ‘நாகராஜ சோழன் எம். ஏ, எம். எல். ஏ’ போன்ற குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி, நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தற்போது இசைஞானி இளையராஜா அவர்கள் தன்னுடைய பாடலை தனது அனுமதியின்றி பயன்படுத்திவிட்டார்கள் என நோட்டீஸ் செய்திருந்தார். கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பேச்சுப்பொருளாக உள்ளது. இந்த விவகாரத்தைப் பற்றி சீமான் அவர்கள் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், பாடல் வரிகள் உடல் என்றால், இசை என்பது உயிர். ஒரு படத்தை உருவாக்கும் பொழுது 60% உரிமம் தயாரிப்பாளருக்கு என்றால் மீதி 40% இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் ஆகியோருக்கு உரிமம் இருக்கிறது. இளையராஜா அவர்கள் மற்றவர்களுக்கு கொடுக்காதீர்கள் என்று சொல்லவில்லை, எனக்கும் உரிமை இருக்கிறது என்று தன்னுடைய நியாயமான உரிமையைத் தான் கேட்கிறார், அவரை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், இது பேசி தீர்க்கப்பட கூடிய விஷயம் தான் என்று பேசியுள்ளார் சீமான்.

Published by
Meena

Recent Posts