பள்ளிகள் திறந்தாச்சா??… வாங்க மாணவர்களே உங்க புத்தகப் பையை அடுக்கலாம்…

கோடை விடுமுறை முடிந்து மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறந்து விட்டது‌. மாணவர்கள் தங்களுடைய புதிய நோட்டு புத்தகங்களை பெற்று அவற்றிற்கு அட்டை போடவும் தொடங்கி இருப்பார்கள்.

அடுத்து என்ன? அவற்றை புத்தகப் பையில் அடுக்கி வைத்து விட வேண்டியது தானே…. புத்தகத்தை பையில் அடுக்குவது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? என நினைத்தால். ஆமாம் புத்தகத்தை பையில் எப்படி அடுக்குகிறோம் என்பது மிகவும் முக்கியம்.

school

சிறு வயது முதலே தன்னுடைய பொருட்களை அடுக்கி வைத்து அதிலிருந்து தேவைப்படும் பொழுது தேடாமல் எடுக்கும் பழக்கத்தையும், எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைக்கும் பழக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு புத்தகப்பை சிறந்த ஆசான்.

பெரும்பாலான வீடுகளில் காலை நேர பரபரப்பிற்கு இடையே ஐடி கார்டு எங்கே? டைரி எங்கே? பென்சில் பாக்ஸ் எங்கே? அறிவியல் புத்தகத்தை காணோம் இது போன்ற சத்தங்களும் சேர்ந்து கேட்பதை நாம் காணலாம்.

புத்தகப் பையை ஒழுங்கு முறையாய் அடுக்கி வைத்தால் இந்த தேவையில்லாத பதட்டத்தை தவிர்க்கலாம்.

மேலும் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்த பிறகு அவருக்கான பாட புத்தகத்தை புத்தகப்பைகள் தலையை விட்டு நாம் நீண்ட நேரம் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

school bag

  1. முதலில் உங்களுக்கான சரியான புத்தகப் பையை தேர்ந்தெடுங்கள். உங்களிடம் இருக்கும் அனைத்து புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் இதர பொருட்களுக்கும் அந்த பை போதுமானதாக இருக்குமா? இந்த வருடம் முழுமைக்கும் தாங்குமா என்று பார்த்து பரிசோதித்து வாங்குங்கள். உங்களுக்கு அணிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
  2. ஏற்கனவே பயன்படுத்திய பையைத்தான் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் அந்த பையை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அதில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து தேவையுள்ளவை தேவையற்றவை என பிரித்து எடுத்து வெளியில் வைத்து விடுங்கள். அனைத்து அடுக்குகளிலும் எந்தவித காகிதங்களோ டிஷ்யூகளோ உடைந்த ஸ்டேஷனரி பொருட்களோ இதர குப்பைகளோ ஏதும் இல்லாத படி நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
  3. ஃபோல்டர்களை பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களையும், வினாத்தாள்களையும், அசைன்மென்ட் களையும் ஃபோல்டரில் தனித்தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
  4. உங்கள் பைகளில் இருக்கும் அடுக்குகளை உங்கள் வசதிக்கேற்ப பிரித்துக் கொள்ளுங்கள். புத்தகங்களுக்கு என்று ஒரு அடுக்கையும் நோட்டுகளுக்கென்று ஒரு அடுக்கையும் ஸ்டேஷனரி கால்குலேட்டர், ஐடி கார்டு போன்ற பொருட்களை முன் பக்கமும் வைத்துக் கொள்ளுங்கள். அவசர தேவைக்கு என ஒரு சிறு தொகை உங்கள் பைக்குள் எப்போதும் இருக்கட்டும்.
  5. முதல் நாள் இரவே பைகளில் இருக்கும் பொருட்களை சரிபார்த்து அடுக்கி வைத்து பழகுங்கள். அது காலை நேர தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க உதவும்.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews