சிறப்பு கட்டுரைகள்

பணிபுரியும் மகளிருக்காக….. 200 ரூபாய் வாடகையில் அரசு விடுதி…. இது எத்தனை பேருக்கு தெரியும்….?

அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள்

தற்போதைய காலகட்டத்தில் குடும்பத்திற்காகவும் தங்களின் சுதந்திரத்திற்காகவும் தங்களின் எதிர்காலத்தை ஜொலிக்க செய்யவும் பெண்கள் வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர். ஆனாலும் சிலருக்கு வெளியூருக்கு சென்று வேலை பார்ப்பது கடினமாக இருக்கும். தங்குவதற்கு வீடு, உணவு போன்றவற்றிற்கான செலவையும் பார்த்தால் வாங்கும் சம்பளத்தில் சேமிக்க முடியாது என்பதால் தான்.

இத்தகைய பெண்களுக்கு அவசியமான தேவை என்றால் அது குறைந்த விலையில் பாதுகாப்பான தங்கும் விடுதிகள். இந்த தேவையை தமிழ்நாடு அரசு எப்போதோ பூர்த்தி செய்யத் துவங்கி விட்டது. அதாவது பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பெறும் மகளிர் பணியாளர்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்டங்களில் மகளிர் விடுதிகளை அமைத்துள்ளது.

யாருக்காக இந்த விடுதிகள்?

Scheme of Working Women Hostel திட்டத்தின் படி மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் பணி புரியும் மகளிர்களுக்கு அரசு விடுதிகள் (Government Hostel) செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் சென்னையில் 25000 வரை ஊதியம் பெறும் பெண்களும் மற்ற மாவட்டங்களில் 15,000 வரை ஊதியம் பெறும் பெண்களும் தங்கி பயன்பெறலாம்.

எவ்வளவு காலம் தங்கலாம்?

இந்த அரசு விடுதியில் தங்குவதற்கு சென்னையில் 300 ரூபாய் வாடகையும் மற்ற மாவட்டங்களில் 200 ரூபாய் வாடகையும் பெறப்படுகிறது. மேலும் இங்கு உணவு மற்றும் மின்கட்டணத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த விடுதிகளில் பணிபுரியும் மகளிர்  மூன்று வருடங்கள் வரை தங்கிக் கொள்ளலாம். அதற்கு மேலும் தங்க விரும்பினால் மூன்று ஆண்டுகளில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தை வைத்து காப்பாளர் பரிந்துரைத்தால் அவர்கள் தங்கும் காலம் நீட்டிக்கப்படும்.

விடுதியின் சிறப்பம்சங்கள்

இது அரசு நிறுவப்பட்ட மகளிர் விடுதியாக இருந்தாலும் இங்கு அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கும். அதாவது 24 மணி நேர பாதுகாப்பு, பொழுதுபோக்கு அறை, சலவை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இலவச வைஃபை, பயோமெட்ரிக், எஃப்எம், சிசிடிவி கண்காணிப்பு போன்ற வசதிகள் உள்ளன.

இதையும் வாசிக்க: சிவனுக்கே சந்தேகத்தைப் பூர்த்தி செய்யும் நந்திபகவான்…! 5 ஆண்டு சிவாலய தரிசனத்தை ஒரே நாளில் பெறுவது எப்படி?

எந்தெந்த மாவட்டங்களில் உள்ளது?

வெளியூருக்கு சென்று பணிபுரியும் பெண்களுக்காக அரசு நிறுவிய மகளிர் விடுதிகள் சென்னை, திருச்சி, செங்கல்பட்டு, சேலம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என அமைக்கப்பட்டுள்ளது.

மற்ற தகவல்கள்

இந்த அரசு மகளிர் விடுதிகள் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு https://www.tnwwhcl.in/ என்ற  இணையதளத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளலாம். இந்த இணையதளத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எந்த முகவரியில் விடுதி அமைந்துள்ளது என்பது பற்றிய தகவலையும் தெரிந்து கொள்ள முடியும்.

Published by
Aadhi Devan

Recent Posts