ரஜினி படத்தில் தனியாக நடித்த செந்தில்.. ஃபோன் செய்து ஒரே வார்த்தையில் சோலியை முடித்த கவுண்டமணி..

தமிழ் திரை உலகில் தனித்தனியாக காமெடிகள் கலக்கிய பல நட்சத்திரங்களின் பெயர்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இரண்டு பேராக இணைந்து காமெடி செய்த பிரபலங்களும் நிறைய பேர் உள்ளனர். அந்த வகையில், தமிழ் சினிமா கண்ட எவர்க்ரீன் காமெடி காம்போ தான் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர்.

இவர்களின் இடத்தின் இனி வருங்காலங்களில் கூட இருவரால் நிரப்ப முடியாது என்னும் அளவுக்கு பல படங்களில் இணைந்து காமெடி செய்துள்ளனர். அதிலும், இவர்கள் இருவரும் தனித்தனியாக நடிப்பதை காண்பதே அரிதான நிகழ்வாக தான் தமிழ் சினிமாவில் இருந்தது.

இவர்கள் இருவரும் இணைந்து வரும் காமெடி காட்சிகளில் செந்தில் எதையாவது உளறிக் கொண்டே இருக்க, பதிலுக்கு தனது கவுண்டர்கள் மூலமாக அவரை டேமேஜ் செய்வதுடன் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவும் வைப்பார் கவுண்டமணி. அதிலும் கரகாட்டக்காரன், ஜென்டில்மேன் உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் தூள் கிளப்பி உள்ளது கவுண்டமணி – செந்தில் காம்போ.

இந்த நிலையில், கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே நடந்த போன் உரையாடல் பற்றி நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்து அதிகம் வைரலாகி வருகிறது. சினிமாவில் பேசுவதை போலவே நிஜ வாழ்க்கையிலும் பலருக்கும் கவுண்டர் கொடுத்து கலாய்த்து தள்ளுவதை வழக்கமாக கொண்டிருந்தவர் தான் கவுண்டமணி.

அப்படிப்பட்ட கவுண்டமணி, தனக்கு ஷூட்டிங் இல்லாத நாட்களில் செந்தில் ஏதாவது திரைப்படம் நடித்துக் கொண்டிருந்தால் உடனடியாக தனக்கு நேரம் போகவில்லை என்பதன் பெயரில் செந்திலுக்கு ஃபோன் அடித்து விடுவாராம் கவுண்டமணி. அந்த வகையில் அப்படி ஒரு முறை சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த வீரா திரைப்படத்தில் செந்தில் நடித்துக் கொண்டிருந்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கவுண்டமணி வீட்டின் அருகே நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது செந்திலுக்கு அழைத்து பேசிய கவுண்டமணி, ‘எங்கே இருக்கிறாய்’ என்று கேட்டதும் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதாக செந்தில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஹீரோ ரஜினி என்பதையும், படத்தின் பெயர் வீரா என்பதையும் செந்தில் மூலம் கவுண்டமணி தெரிந்து கொண்டுள்ளார். ‘ரஜினி சாரே தனியா காமெடி பண்ணுவாரு அப்புறம் நீ என்னடா அங்க பண்ணிட்டு இருக்க.. வீட்டுக்கு கிளம்பி வா’ என மறுகணமே கவுண்டமணி கூறியுள்ளாராம். படத்திலாவது டயலாக் மற்றும் சூழ்நிலை உள்ளிட்ட விஷயங்கள் இருக்கும்.

ஆனால் இவை எதுவுமில்லாமல், உடனடியாக கவுண்டமணி வித்தியாசமாக சொன்ன பதில் பற்றி ரஜனிகாந்த் மேடையில் சொன்னதும் அங்கிருந்த அனைவருமே சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

Published by
Ajith V

Recent Posts