ஆசையாய் மல்லிப்பூ கேட்ட மனைவி.. தோட்டத்தையே உருவாக்கிய பிரபல பாடகர்

சினிமா உலகில் எத்தனையோ நட்சத்திரத் தம்பதிகள் இருந்தாலும், தன் கணவன்பாணியில் அதே நாட்டுப்புற இசையைத் தேர்ந்தெடுத்து அதில் பல கிராமியப் பாடல்களைப் பாடி இன்று புகழ்பெற்ற பாடகர்களாக விளங்கும் தம்பதியினர்தான் புஷ்வனம் குப்புசாமி-அனிதா குப்புசாமி தம்பதியினர்.

நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமின்றி பல திரையிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என ஆயிரக்கணக்கில் பாடல்களையும், இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் புஷ்வனம் குப்புசாமியும் – அனிதா குப்புசாமியும் இணைந்து பயிலும்போது ஏராளமான நாட்டுப்புறக் கச்சேரிகளை நடத்தியுள்ளனர்.

இசையால் இணைந்த இந்த ஜோடி நிஜ வாழ்விலும் இணைந்தனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயில்கையில் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு 1992-ல் திருமணம் முடித்தனர். திருமணம் முடித்தவுடன் தனது மனைவியை முதன் முதலாக அவரது சொந்த ஊரான புஷ்பவனம் கிராமத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது முதன்முதலாக மனைவியை அழைத்துச் செல்கிறோமே தலை நிறைய வைக்க மல்லிப்பூ வாங்கிக் கொடுக்கலாம் என எண்ணி பூக்கடையில் மல்லிப்பூ கேட்டிருக்கிறார்.

அப்பாவும், மகனும் இசையால் ஆட்டிப் படைத்த இதயம்.. 80, 90களின் காதலர்களை உருக வைத்த காதல் தீம்…

அப்போது அந்தக் கடைக்காரர் இன்று மல்லிப்பூ நிறைய ஆர்டர்கள் வந்துள்ளதால் யாருக்கும் மல்லிப்பூ விற்பனை செய்யவில்லை என்று கூற, புஷ்பவனம் குப்புசாமியின் மனம் வாடியிருக்கிறது. முதன் முதலாக மனைவியை அழைத்துச் செல்கிறோமே அவருக்கு நினைத்த மாதிரி ஒரு முழம் மல்லிப்பூ கூட வாங்கிக் கொடுக்க இயலவில்லையே என்று வருத்தப்பட்டு அன்று ஓர் சபதம் எடுத்தார். இனி எந்த நேரமும் பூ வீட்டிலேயே இருக்கும்படி மதுரை மல்லிச்செடியை வாங்கி சென்னை கொண்டு வந்து தனது இல்லத்தில் நட்டு வைத்து வளர்த்திருக்கிறார்.

எதிர்பார்த்ததற்கும் மேலாக அந்த மல்லிச் செடி தினமும் அழகாய்ப் பூக்க வீடே மல்லி வாசத்தால் நிரம்பியிருக்கிறது. மேலும் அவர்கள் புதிதாய் வீடு கட்டி குடியேறிய போதும் வீட்டிலேயே மாடித் தோட்டம் மற்றும் வீட்டின் பின்புறம் தோட்டம் என அமைத்துப் பராமரித்து வருகின்றனர்.

இதில் அவர் தன் மனைவிக்கு ஆசையாய் வாங்கிக் கொடுத்த மல்லிச் செடியும் அடக்கம். அந்தச் செடியை பதியம்போட்டு பல செடிகளாக உருவாக்கி ஒரு மினி மல்லித்தோட்டமே உருவாகும் அளவிற்கு வீட்டையே மல்லித் தோட்டமாக மாற்றியிருக்கிறார் புஷ்பவனம் குப்புசாமி.

அன்று தனது காதல் மனைவிக்காக ஒருமுழம் மல்லிப்பூ வாங்க இயலாமல் போனதால் இன்று வீட்டில் ஒரு மினி மல்லிகைத் தோட்டத்தினையே தனது அன்பினை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த நாட்டுப்புறப் பாடகர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews