ப்ளாஷ்பேக் – இயக்குனர் கார்த்திக் ரகுநாத்!

இயக்குனர் கார்த்திக் ரகுநாத் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக ஒரு காலத்தில் இருந்தவர். இன்று இவரின் புகைப்படம் கூட கிடைக்கவில்லை.


இவர் இயக்கிய சாவி திரைப்படம்தான் சத்யராஜை ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம். ஆன்ட்டி ஹீரோவாக நடித்ததால் இதற்குப் பிறகு வந்த கடலோர கவிதைகள்தான் சத்யராஜுக்கு ஹீரோவாக நடித்த முதல் படம் என்றாகி விட்டது.

இவர் இயக்கிய சாவி திரைப்படம் நிமிடத்திற்க்கு நிமிடம் பரபரப்பை கூட்டும் அருமையான சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம்.

கார்த்திக் ரகுநாத் அவர்கள் சத்யராஜை வைத்து இயக்கிய, சந்திரபோஸ் இசையில் மக்கள் என் பக்கம் திரைப்படம் சத்யராஜின் திரைப்பட வரலாற்றில் முக்கியமான படம். அவருக்கு பிடித்த படங்களாக மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, அமைதிப்படை படங்களைத்தான் சத்யராஜ் பல பேட்டிகளில் சொல்வதுண்டு.

இதே போல சிவாஜி, ரேவதி, சுரேஷ் நடிப்பில் இவர் இயக்கிய மருமகள் திரைப்படம் குடும்ப பாசத்தை சொல்லிய படம். இந்த படம் வெளிவந்தபோது சிவாஜியின் சாதனை படம் சென்னையில் 100 நாளை கடந்து கொண்டிருந்ததாம். அதே நேரத்தில் இந்த படமும் வந்தது.

இந்த படத்தில் அதிகபட்சம் படுக்கையில் நோயாளியாக படுத்து கொண்டிருப்பதுதான் காட்சி. இந்த படமும் சாதனையோடு சேர்ந்து 100 நாள் ஓடியதால் எம்.ஜி.ஆர் எலெக்சனில் ஜெயித்ததை போல சிவாஜியும் படுத்துக்கொண்டே ஜெயித்தார் என சொல்வதுண்டாம்.

பல முன்னணி நடிகர்களை சிவாஜியோடு நடிக்க வைத்தது கார்த்திக் ரகுநாத் அவர்கள். விஜயகாந்த், சிவாஜி நடிப்பில் இவர் இயக்கிய வீரபாண்டியன் திரைப்படம் 50 நாட்களுக்கு மேல் ஓடியது.

அதே போல் கார்த்திக், சிவாஜி நடிப்பில் ராஜ மரியாதை என்ற திரைப்படம் கலகலப்பான பாசத்தை மையப்படுத்தும் படமாக வந்தது. வண்ணக்கிளியே வாடி வெளியே, சின்னஞ்சிறு அன்னம் ஒன்று பாடல் அருமையாக இருக்கும். இவர் போன்ற இயக்குனர்களை எல்லாம் தமிழ் சினிமா மறந்தே போய் விட்டது வருத்ததிற்க்குரியது.

Published by
Staff

Recent Posts