கணவரை விவாகரத்து செய்துவிட்டதால் போட்டோகிராபரிடம் பணத்தை திருப்பி கேட்ட பெண்.. அதிர்ச்சி தகவல்..!

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டதாகவும் அதனால் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை திரும்ப பெற்றுக் கொண்டு தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறும் போட்டோகிராபரிடம் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் திருமணம் செய்த போது போட்டோகிராபர் புகைப்படங்கள் எடுத்து அந்த பெண்ணிடம் ஒப்படைத்தார். இதற்காக அவர் ஒரு குறிப்பிட்ட தொகையையும் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்து விட்டதாகவும் அதனால் தனது கணவருடன் எடுத்த போட்டோக்கள் தனக்கு தேவையில்லை என்றும் அந்த போட்டோக்களை திரும்ப பெற்றுக் கொண்டு தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறும் அந்த பெண் புகைப்படக்காரர்களிடம் கூறியுள்ளார்.

முதலில் இதை காமெடி என்று நினைத்த புகைப்படக்காரர் அதன்பிறகு அந்த பெண் சீரியஸாகவே பணத்தை திருப்பி கேட்கிறார் என்பதை அடுத்து அவர் கண்ணியமான முறையில் பதில் அளித்தார். போட்டோகிராப் தொழில் என்பது பணத்தை திருப்பி அளிக்கும் சேவை கிடையாது என்றும் ஒரு முறை புகைப்படம் எடுத்து வாடிக்கையாளரிடம் ஒப்படைத்து பணத்தை பெற்று விட்டால் அத்துடன் அந்த ஒப்பந்தம் முடிந்து விட்டது என்றும் பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண் போட்டோகிராபர் மீது வழக்கு தொடர்வேன் என வாட்ஸ் அப் மூலம் மிரட்டி உள்ளதாகவும் தெரிகிறது. இந்த உரையாடல்களை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அந்த போட்டோகிராபர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நபர் போட்டோகிராபரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

தனது முன்னாள் மனைவியின் செயலுக்காக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவருடைய கோரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு விதங்களில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts