குருப்பெயர்ச்சி விழா- ஆலங்குடி குரு கோவில் செல்வோமா

வருகிற 28ம் தேதி தீபாவளிக்கு மறுநாளன்று குருபகவான், விருச்சிகராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறது. குருவுக்கு பல்வேறு கோவில்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்தான் முதன்மையான ஸ்தலமாக அனைவருக்கும் சொன்னால் புரிந்து கொள்ள கூடிய ஸ்தலமாக உள்ளது.


இந்த கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பே சோழ பேரரசர்களால் கட்டப்பட்டது.

தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரை கோவில்களில் இது 98வது கோவில். இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புவாக காட்சியளிக்கிறார். அம்பாளின் பெயர் ஏலவார் குழலி அம்பிகை என்பதாகும்.

இங்கு மூலவராக ஆபத்சகாயேஸ்வரரும், உற்சவராக தட்சிணாமூர்த்தியும் இருப்பது வேறெங்கும் காண முடியாதது.

முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய முயன்றபோதுஅவர்கள் தேவாமிர்தத்தை பெறுவதற்காக வாசுகி என்ற தேவலோக பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர்.

அப்போது அந்தப் பாம்பு ஆலகால விஷத்தை கக்கியது , இதை சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி சிவன் உலகைக் காத்ததால் ஆபத்சகாயேஸ்வரர் என்று மூலவர் சிவன் அழைக்கப் படுகிறார்.

இங்குள்ள குருவுக்கு குருப்பெயர்ச்சியன்று பல்வேறு வகையான ஹோமங்கள் நடைபெற்று அபிஷேகம் அலங்காரம் நடைபெறும். ஆலங்குடி குரு ஸ்தலம் தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை செய்தல், மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்தும் இவரை வழிபடலாம்.

இங்கு எழுந்தருளியுள்ள குரு தட்சிணாமூர்த்தி விசேசமானவர் நவக்கிரக ஸ்தலங்களில் குரு பரிகாரஸ்தலமாக இக்கோவில் விளங்குகிறது. கும்பகோணம் நகரில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி இக்கோவிலுக்கு உள்ளது.

நவக்கிரக கோவில்களில் இது குரு பரிகார ஸ்தலமாக இது உள்ளது.

Published by
Staff

Recent Posts