’சின்ன சின்ன வீடு கட்டி’ முதல் ‘சின்ன வீடு’ வரை.. வில்லியாகவும் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகை அனு

தமிழ் திரை உலகில் ’சின்ன சின்ன வீடு கட்டி’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி பாக்யராஜின் ’சின்ன வீடு’ திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சம் பெற்றவர் நடிகை அனு. இவர் ஆந்திர மாநிலம் விஜயநகரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயதிலேயே அவருக்கு கலை ஆர்வம் இருந்ததாகவும் கல்வி, கலை ஆகிய இரண்டிலும் அவர் ஆர்வம் காட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாட்டியத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த அனுவை அவரது பெற்றோர்கள் முறைப்படி நாட்டியம் பயில சென்னைக்கு அனுப்பினர். சென்னையில் அவர் தங்கியிருந்து பிரபல நாட்டிய குருக்களிடம் நாட்டிய பயிற்சி பெற்றார். இந்த நிலையில் தான் சுதாகர் நடித்த ’சின்ன சின்ன வீடு கட்டி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது கலை ஆர்வத்தை இந்த படத்தின் மூலம் அவர் தீர்த்துக் கொண்டார்.

முதல் படமே அவருக்கு நல்ல படமாக அமைந்ததையடுத்து இரண்டாவது படமாக அவருக்கு தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து டி ராஜேந்தர் இயக்கத்தில் சங்கர் நடிப்பில் உருவான ராகம் தேடும் பல்லவி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டர் அவருக்கு திருப்புமுனையாக அமைந்ததுடன் மட்டுமில்லாமல் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரங்கள் கிடைக்கவும் வழி செய்திருந்தது.

ஆனால் அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் நடிகை அனுவுக்கு மிகப் பெரிய புகழை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் அது பாக்யராஜின் சின்ன வீடு திரைப்படம் தான். இந்த படத்தில் அவர் கிட்டத்தட்ட ஒரு வில்லி கேரக்டரில் நடித்திருப்பார். பாக்யராஜை தன் அழகில் மயக்கி அவரிடம் இருந்த சொத்துக்களையும் பணத்தையும் கறக்கும் முயற்சியில் ஈடுபடும் கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்தை அடுத்து அவர் மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றார். குறிப்பாக கோடை மழை என்ற திரைப்படத்தில் கொடுமைக்கார அண்ணி கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். அதன் பின்னர் மலைச்சாரல், அவள் போட்ட கோலம் போன்ற ஒரு சில படங்களில் நடித்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர் திரையுலகில் இருந்து விலக முடிவு செய்தார்.

தொழிலதிபர் ஒருவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார் அனு. திருமணத்திற்கு பின்னர் அவருக்கு வில்லி கேரக்டர் கிடைத்த நிலையில் அவர் நடிக்க விரும்பவில்லை. முற்றிலும் அவர் திரையுலகில் இருந்து விலகி இல்லத்தரசியாகவே வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் சென்னையில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Published by
Bala S

Recent Posts