அப்பாவா நடிக்க பக்காவா பொருந்துற நடிகர்.. சூர்யா படத்தோட முடிவுக்கு வைத்த சினிமா வாழ்க்கை..

முன்னணி நடிகர்கள் மக்கள் மத்தியில் எப்படி பெயர் எடுப்பார்களோ அந்த அளவுக்கு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபத்திரங்களில் நடிப்பவர்களும் கூட கவனம் பெறுவார்கள். அந்த வகையில் முக்கியமான ஒரு குணச்சித்திர நடிகர் தான் கேகே சௌந்தர்.

இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் சிறு வயதிலேயே நாடகங்கள் நடித்து அதன் மூலம் பெற்ற அனுபவம் காரணமாக திரையுலகில் நுழைந்தார். எம்ஜிஆர் நடித்த மந்திரிகுமாரி என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான சௌந்தர், 1950 களில் சில படங்களில் நடித்தாலும் 60கள் முதல் 80 களில் அவர் ஏராளமான படங்களில் நடித்தார். 90 களிலும் அவர் இளைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.

அவரது நடிப்பில் உருவான மிகச்சிறந்த படங்களில் வல்லவன் ஒருவன், அலிபாபாவும் 40 திருடர்களும், பாசம், அன்னை இல்லம், தேடி வந்த மாப்பிள்ளை, என் அண்ணன், புன்னகை, நேற்று இன்று நாளை, வாழ்ந்து காட்டுகிறேன், ஒரு கை ஓசை, போன்ற பல படைப்புகளை கூறலாம். எம்ஜிஆர், சிவாஜி முதல் கமல், ரஜினி தொடங்கி இன்று இளம் நடிகர்களாக இருக்கும் ஜெயம் ரவி வரை அவர் இணைந்து நடித்துள்ளார்.

பெரும்பாலான திரைப்படங்களில் நாயகன் நாயகிகளுக்கு அப்பா கேரக்டரில் நடித்துள்ள கேகே சௌந்தர், சில படங்களில் அண்ணன் கேரக்டரிலும் கூட நடித்திருக்கிறார். பாக்யராஜ் நடித்து இயக்கிய ஒருகை ஓசை என்ற திரைப்படத்தில் அவரின் அப்பாவாக நடித்திருப்பார். அந்த படம் முழுவதையும் அவர்தான் சுவர் போல தாங்கி இருப்பார்.

அதேபோல் மண்வாசனை திரைப்படத்தில் ஊர் பெரிய மனிதன் வேடத்தில் நடித்திருந்த கேகே சௌந்தர், காந்திமதியுடன் தனது பேத்தி வயதுக்கு வந்த விஷயத்தை மிகவும் சாதுரியமாக அவர் கூறும் காட்சி அசத்தலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தானை முடிச்சு திரைப்படத்தில் ஊர்வசியின் அப்பாவாகவும், சின்ன வீடு திரைப்படத்தில்  கல்பனா அப்பாவாகவும் நடித்திருப்பார்.

நிழல்கள் படத்தில் நிழல்கள் ரவி அப்பாவாக, சின்ன பசங்க நாங்க படத்தில் முரளிக்கு அப்பாவாக,  நம்ம ஊரு பூவாத்தா திரைப்படத்தில் கங்கா என்ற கேரக்டருக்கு அப்பாவாக, அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு திரைப்படத்தில் மந்த்ராவுக்கு அப்பாவாக, மகா பிரபு படத்தில் வினிதாவுக்கு அப்பாவாக, பெரிய தம்பி திரைப்படத்தில் சந்திரசேகருக்கு அப்பா என ஏராளமான அப்பா கேரக்டரில் நடித்துள்ளார்.

கடந்த 2000 ஆண்டு சூர்யா நடித்த உன்னை நினைத்து என்ற திரைப்படத்தில் சூர்யாவின் தந்தையாக நடித்திருந்த கேகே சௌந்தரின் கடைசி படம் அது தான். நடிகர் கேகே சார்ந்த கடந்த 2003 ஆம் ஆண்டு தனது 78 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமே அஞ்சலி செலுத்தி இருந்தது. 1950ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை 50 ஆண்டுகளாக அவர் திரையுலகில் சேவை செய்துள்ளார் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

Published by
Bala S

Recent Posts