வளையல் கடை வைத்திருந்தவருக்கு வந்த வாய்ப்பு.. மண்வாசனையில் ஹீரோவாக பாண்டியன் தேர்வானது இப்படித்தான்…

தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் பரப்பி முதன்முதலாக பட்டிதொட்டி எங்கும் படப்பிடிப்பு நடத்தி  தமிழ்நாட்டின் கிராமங்களின் அழகினையும், அவர்களது குணாதிசயங்களையும் உலகறியச் செய்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. எந்த ஒரு இயக்குநருக்கு இல்லாத புகழாக தான் இயக்கிய 16 வயதினிலே என்ற முதல் படத்திலிருந்து தோல்வி என்பதே இல்லாமல் தொடர்ந்து ஐந்து படங்களை வெள்ளிவிழா படங்களாகக் கொடுத்து திரைத்துறையில் இயக்குநர் இமயமாக உயர்ந்தார்.

இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த சித்ரா லட்சுமணன் தயாரிப்பில் பாரதிராஜா இயக்கிய படம் தான் மண்வாசனை. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மற்றொரு கிராமத்து கதைக் களத்தினைக் கொண்டு உருவானது.

இந்தப் படத்தில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, ஆனந்த தேன், அரிசி குத்தும் என கிராமிய இசையில் இளையராஜா பாடல்களில் மனதினை வருடியிருந்தார். இன்றும் காதல் பாடல்களில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு படத்திற்கு தனி இடம் உண்டு. அதுவரை ரஜினி, கமல் ஆகியோரை வைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த பாரதிராஜா இந்தப் படத்திற்காக முதலில் அணுகியது சிவக்குமாரைத் தானாம். அவருக்கு ஹீரோயினாக ராதாவை அணுகியிருக்கிறார்கள். ஆனால் சிவக்குமாருக்கு கால்ஷீட் இல்லாததாலும், ராதா பிளஸ் டூ பரீட்சை இருந்ததாலும் இதில் நடிக்க முடியாமல் போனது.

அதன்பிறகு பிரபு மற்றும் தெலுங்கு நடிகர்கள் ஆகியோரை முயற்சித்துப் பார்த்தும் ஹீரோ மட்டும் ஒப்பந்தமாகவில்லை. ஆனால் நடிகை ரேவதி அப்போது பிளஸ் டூ பரீட்சை எழுதிக் கொண்டிருப்பினும் மண் வாசனை படத்தில் ஒப்பந்தமானார்.

சூர்யா ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர் சொன்ன உண்மை..ரகசியத்தை உடைத்த சிவக்குமார்!

இந்நிலையில் ஹீரோ மட்டும் முடிவாகமல் மளமளவென ஷுட்டிங் ஆரம்பமானது. தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஷுட்டிங் நடைபெற்றது. ஆனால் ஹீரோவுக்கு என்ன செய்யலாம் என்று குழம்பிய பாரதிராஜா மதுரையில் கல்லூரிகளில் சென்று யாரையாவது தேடலாம் என்று எண்ணி மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் முடித்து விட்டுத் திரும்பும்போது ஓர் இளைஞன் வளையல் விற்றுக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்த பாரதிராஜாவுக்கு மனதில் ஏதோ பட உடனடியாக அந்த இளைஞரிடம் விபரங்களைக் கேட்டுவிட்டு தன்னுடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு மேக்கப் போட்டுவிட்டு நடித்துக் காட்டச் சொன்ன போது பாரதிராஜா சொன்னதை அந்த இளைஞன் அப்படியே செய்ய உடனே அவரை ஹீரோவாக மாற்றினார் பாரதிராஜா. அந்த இளைஞர்தான் நடிகர் பாண்டியன்.

புதுமுகத்தினை ஹீரோவாகப் போட்டதில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுக்கு உடன்பாடு இல்லையாம். எனினும் பாரதிராஜா அவரைச் சமாதானப் படுத்தி இந்தப் படம் எப்படியும் ஹிட் ஆகும் என்று நம்பிக்கை கொடுத்து மண் வாசனை படத்தினை வெற்றிப் படமாக கொடுத்தாராம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews