ஒரே நாளில் படமாக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் பாடல்.. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு வழிவகுத்த அன்பே வா!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அதுவரை நடித்து வந்த புரட்சிப் படங்களிலிருந்து விடுபட்டு முற்றிலும் காதல், காமெடி என பக்கா கமர்ஷியல் படமாக நடித்த படம் தான் அன்பே வா. ஏ.வி.எம் நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்தத ஒரே படம் இதுவே. படப்பிடிப்பு அனைத்தும் பெரும்பாலும் சிம்லாவில் எடுக்கப்பட்டது. சிம்லாவின் குளிரும், சரோஜாதேவியின் அழகும், எம்.ஜி.ஆரின் ஹீரோயிசமும், நாகேஷின் காமெடியும் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கியது.

1966-ல் வெளியான அன்பே வா படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அனது. புதிய வானம் புதிய பூமி.., ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. போன்ற காலத்தால் அழியாத பல சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெற்றிருந்தது. எம்.ஜி.ஆர் தான் நடித்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம் என்று பலமுறை கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ராஜாவின் பார்வை பாடலானது எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவி குதிரை வண்டியில் அமர்ந்து விண்ணில் பறப்பது போல காட்சிகளானது எடுக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடல் எடுக்கப்பட்ட விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இப்பாடலை இயக்குநர் ஏ.சி.திருலோகச் சந்தர் ஒரே நாளில் படமாக்கியுள்ளார்.

தவறு செய்த எம்.ஜி.ஆர். நண்பர்.. தவறை உணரவைத்து மீண்டும் தூக்கிவிட்ட பொன்மனச் செம்மல்

எப்படி தெரியுமா? அன்பே வா படத்தின் ஷுட்டிங் சிம்லாவில் நடைபெற்ற பொழுது படக்குழு சிம்லா கிளம்ப தயாராக இருந்தது. இந்நிலையில் படத்திற்கான அனைத்துப் பாடல்களையும் எம்.எஸ்.விஸ்வநாதன் முடித்துக் கொடுக்க ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ராஜாவின் பார்வை பாடலை முடித்துக் கொடுத்து சிம்லா கிளம்புங்கள் என்று கூற, இயக்குநர் திருலோகச்சந்தர் தயாரானார்.

இதன்படி எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவி குதிரை வண்டியில் செல்வது போல் படமாக்கும் காட்சியில் முதலில் குதிரை வண்டியின் கயிற்றினை மட்டும் எம்.ஜி.ஆர் கையில் கொடுத்து அதை குதிரை வண்டி ஓட்டுவது போல் ஆட்டுமாறு கூறியிருக்கிறார். மறுமுனையில் மற்றொருவர் அந்தக் கயிறைப் பிடித்துக் கொண்டார்.

இந்தக் காட்சியை எடுத்து முடித்த பின்னர் நிஜக் குதிரையை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து அதன் தலையை ஆட வைத்து அதனை மட்டும் ஷுட்டிங் எடுத்துள்ளனர். பின்னர் எடிட்டிங்கில் இரண்டையும் ஒன்று சேர்த்து நிஜக் குதிரைவண்டியில் சவாரி செய்வது போல் இயக்குநர் உருவாக்கியருப்பார். அந்தக் காலகட்டத்திலேயே தொழில்நுட்பங்கள் இல்லாத காலகட்டத்தில் கிராபிக்ஸ்-ல் உருவாக்கியது போல இந்தப் பாடல் காட்சி அமைந்திருக்கும்.

மேலும் குதிரை செல்லும் அந்த இசையானது மீசை முருகேசன் உருவாக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒரே நாளில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடல் உருவாகி காலத்தால் அழியாத காதல் காவியமானது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews