ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வேதனை அடைய வைத்த அஜித் ரசிகர்கள்.. பல நாள் கழிச்சு தெரிஞ்ச உண்மை!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் துணிவு திரைப்படம், கடந்தாண்டு பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதற்கடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் அஜித்குமார் நடிப்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், பின்னர் சில காரணங்களால் இந்த படம் பாதியிலேயே நின்று போனது.

இதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதுடன் மட்டுமில்லாமல் தற்போது வெளிநாட்டில் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றது.

விடாமுயற்சி திரைப்படம் தொடர்பாக எந்தவித அப்டேட்டையும் கடந்த சில மாதங்களாகவே லைகா நிறுவனம் வெளியிடாமல் இருந்து வருகிறது. இதனால் ஆரம்பத்தில் ஒருவேளை படம் பாதியில் நின்று போனதா என்ற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருந்த அதே வேளையில், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வரும் பல்வேறு புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களுக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்திருந்தது.

அப்படி இருந்த போதிலும் படம் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த வித அறிவிப்பும் வராமல் இருப்பது ரசிகர்களை ஒரு பக்கம் ஏமாற்றம் அடையவும் செய்துள்ளது. இதனால் தொடர்ந்து லைகா நிறுவனம் தங்களின் சமூக வலைத்தளங்களில் பதவிடும் பிற திரைப்படங்கள் குறித்த அப்டேட்களில் விடாமுயற்சி அப்டேட் வேண்டும் வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இது பற்றி நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். 3, வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “லால் சலாம் படத்தின் அப்டேட்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் போது, தலைவர் 171 பத்தி போடுங்க, விடாமுயற்சி பத்தி போடுங்க என பலரும் கமெண்ட் செய்வதை பார்த்தால், ‘என்னடா நம்ம இவங்க லிஸ்ட்லயே இல்ல’ என தோன்றியது. நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் நான் நினைத்தேன். தற்போது லால் சலாம் முடிந்து நான் பார்த்த பிறகு தைரியமாக சொல்கிறேன், என்னுடைய படம் உங்கள் அனைவரின் லிஸ்டிலும் இருக்கும். அதை நான் நம்புகிறேன்” என மிகவும் தன்னம்பிக்கையுடன் லால் சலாம் படத்தை பற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது பேசியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews