ரோஜா படத்தை தியேட்டரில் பார்த்துட்டு.. தன்னை தானே செருப்பால் அடித்த பிரபல நடிகை..

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்து, இன்று ஹாலிவுட் லெவலில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருபவர் தான் ஏ. ஆர். ரஹ்மான். மணிரத்னம் திரைப்படங்களுக்கு இளையராஜா ஒரு காலத்தில் இசையமைத்து வந்த சூழலில், ரோஜா திரைப்படத்தில் திடீரென அவர் ஏ. ஆர். ரஹ்மானை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.

இளையராஜா போன்ற ஜாம்பவானை வைத்து இசையை உருவாக்கிக் கொண்டிருந்த இயக்குனர் மணிரத்னம், திடீரென 25 வயதாகும் இளைஞர் ரஹ்மானை இசையமைப்பாளராக கொண்டு வந்தது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. சின்ன பையன் என்றெல்லாம் ஏ. ஆர். ரஹ்மானை சுற்றி விமர்சனங்கள் உருவான சூழலில், ரோஜா படத்தின் பாடல்கள் வெளியான பின் அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கினார்.

காதல் ரோஜாவே, புது வெள்ளை மழை உட்பட ரோஜா படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் இந்திய அளவில் பேசுபொருளாக மாற முதல் படத்திலேயே தேசிய விருது வென்றும் பட்டையை கிளப்பி இருந்தார். இதற்கடுத்து வெஸ்டர்ன், கிராமத்து பின்னணி கொண்ட கதை என எந்த படமாக இருந்தாலும் பலர் ரஹ்மானை அழைத்து இசையமைத்து வந்த சூழலில் பின்னர் மெல்ல மெல்ல பாலிவுட் பக்கமும் தலை வைத்து ஆஸ்கர் விருது வரைக்கும் வென்றார்.

ரஹ்மானுக்கு மட்டும் இல்லாமல், ரோஜா படத்தில் நடித்த நாயகன் அரவிந்த்சாமி மற்றும் நாயகி மதுபாலா என அனைவருக்குமே இந்த படம் முக்கியமானதாக இருந்தது. இந்த நிலையில், ரோஜா படம் வெளியான பின்பு அதனை பார்த்துவிட்டு பிரபல நடிகை ஒருவர் தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டது தொடர்பான செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையான லட்சுமியின் மகளும் நடிகையும் தான் ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்த நிலையில், தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்றும் நடித்து வருகிறார். இதனிடையே, மதுபாலாவுக்கு முன்பாக ஐஸ்வர்யாவை தான் ரோஜா படத்தில் நடிக்க மணிரத்னம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் ஐஸ்வர்யா பாஸ்கரனோ ஏற்கனவே ஒரு தெலுங்கு படத்திற்கு தேதி கொடுத்ததன் காரணமாக, ரோஜா படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. இது பற்றி ஒரு பேட்டியில் முன்பு பேசி இருந்த ஐஸ்வர்யா பாஸ்கரன், தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க தேதி கொடுத்ததால் ரோஜா படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் ஆனால் பின்னாளில் அந்த தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கும் நின்று போனதாகவும் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் ரோஜா படத்தை திரையரங்கில் பார்த்து விட்டு அப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டதற்காக தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ள ஐஸ்வர்யா, இன்று வரை அதனை இழந்ததை எண்ணி வருத்தப்பட்டு வருகிறாராம்.

Published by
Ajith V

Recent Posts