திடீரென வீட்டிற்கு வந்து காதல் மோதிரம் அணிவித்த ‘வாரிசு’ நடிகர்.. சிவரஞ்சனி வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..!

தமிழ் நடிகை சிவரஞ்சனியை காதலித்த பிரபல நடிகர் ஒருவர் திடீரென வீட்டுக்கு வந்து மோதிரம் மாற்றி தனது காதலை தெரிவித்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நடிகர் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த். இவர் தான் வாரிசு படத்தில் விஜய்யின் சகோதரர்களில் ஒருவராக நடித்திருந்தார்.

தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சிவரஞ்சனி. சினிமா சம்பந்தமே இல்லாத சிவரஞ்சனியின் குடும்பத்தினர் அவரை நன்றாக படிக்க வைக்க வேண்டும், நல்ல வேலையில் அமர்த்த வேண்டும் என்றுதான் திட்டமிட்டு இருந்தனர்.

தமிழ் சினிமாவில் புதிய டிரெண்ட்டை உருவாக்கிய ஊமை விழிகள்: பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் சாதனை..!

இந்த நிலையில் பள்ளி படிப்பின் போது அவர் நடத்திய கலை நிகழ்ச்சி ஒன்றில் பிரபலம் ஒருவர் கலந்து கொண்டதை அடுத்து அவர் திடீரென சிவரஞ்சனியின் வீட்டிற்கு வந்து அவரிடம் நடிக்க சம்மதமா என்று கேட்டார். அதன் பிறகு பெற்றோர் அனுமதி உடன் அவர் நடிக்க தொடங்கினார். அந்த படம் தான் கார்த்திக் நடித்த மிஸ்டர் கார்த்திக்.

இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் சிவரஞ்சனியின் அழகு மற்றும் நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததால் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தலைவாசல், தங்க மனசுக்காரன், டேவிட் அங்கிள் ஆகிய படங்களில் நடித்தார்.

பிரபு, சுகன்யா நடித்த சின்ன மாப்ளே என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த சிவரஞ்சனி, கமலஹாசன் நடித்த கலைஞன் என்ற திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் அவர் கதையின் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

அதன் பிறகு அரவிந்த்சாமி ஜோடியாக தாலாட்டு என்ற திரைப்படத்தில் நடித்த சிவரஞ்சனி விஜயகாந்த் நடித்த ராஜதுரை என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு அரண்மனை காவலன், வண்டிச்சோலை சின்ராசு, செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில்தான் அவருக்கு தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக தெலுங்கில் ஸ்ரீகாந்த் உடன் அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஸ்ரீகாந்த் உடன் நடித்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் காதலித்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் காதலை சொல்லிக் கொள்ளாமல் மனதிற்குள் வைத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திடீரென ஒருநாள் ஸ்ரீகாந்த், சிவரஞ்சனியின் வீட்டிற்கு வந்து உன்னுடைய பூஜை அறை எங்கே இருக்கிறது என்று கேட்டார். அப்போது அவர் பூஜை அறையை காண்பித்தபோது திடீரென மோதிரத்தை எடுத்து அவரது கையில் அணிந்தார். அதேபோல் ஒரு செயினையும் எடுத்து அவரது கழுத்தில் அணிவித்தார்.

இதை பார்த்து சிவரஞ்சனையின் தாயார் அதிர்ச்சி அடைந்து என்ன செய்கிறீர்கள் என கேட்டபோது நானும் சிவரஞ்சனியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம், எங்கள் திருமணத்தை நடத்தி வையுங்கள் என்று கோரிக்கை வைக்க சிவரஞ்சனியின் தாயார் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதன் பின்னர் ஒப்புக்கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் சிவரஞ்சனி – ஸ்ரீகாந்த் திருமணம் கடந்த 1997ஆம் ஆண்டு நடைபெற்றது.

ரஜினி – பாலசந்தர் – விசு என மும்மேதைகள் பணியாற்றிய படம்.. வில்லன் நடிப்பில் அதகளப்படுத்திய நெற்றிக்கண்!

திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து விலகிவிட வேண்டும் என்பதில் சிவரஞ்சனி உறுதியாக இருந்தார். தெலுங்கு திரையுலக மார்க்கெட் உச்சத்தில் இருந்த நிலையில் திரையுலகில் இருந்து விலக்குவது புத்திசாலித்தனம் இல்லை என்று பலர் அவருக்கு அறிவுரை கூறினர். ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிப்பு வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்த சிவரஞ்சனி அப்போது நடித்துக் கொண்டிருந்த படங்களை மட்டும் முடித்துவிட்டு அதன் பிறகு வந்த பல வாய்ப்புகளை அவர் தவிர்த்தார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். மூத்த மகன் ரோஷன் தெலுங்கு திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் அவர் அமெரிக்கா சென்று  பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்ததாகவும் கூறப்பட்டது.

சிவரஞ்சனி மகள் மேத்தா விளையாட்டு துறையில்  ஆர்வமாக இருக்கிறார் என்றும் கடைசி மகன் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமலுடன் நடிக்க மறுப்பு.. ரஜினி படத்திற்கு வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்த நடிகை..!

தமிழ் திரையுலகின் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சிவரஞ்சனிக்கு திருமணத்திற்கு பிறகு பல வாய்ப்புகள் வந்தும் அவர் தனது குடும்பம் தான் முக்கியம் என்று நடிப்பை நிறுத்திவிட்டார். அதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தாலும் அவர் தான் எடுத்த முடிவு சரியானது தான் என்பதை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட கூறியிருந்தார்.

Published by
Bala S

Recent Posts