ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ முடியாம போயிருச்சே.. வைரலாகும் ரகுவரனின் பழைய பேட்டி

ஒரு வில்லன் நடிகரை மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் என்றால் அது நடிகர் ரகுவரனாகத்தான் இருக்க முடியும். அந்தக் கால வில்லன் நடிகர்களான பி.எஸ். வீரப்பர், நம்பியார் போன்றோர் தங்கள் நடிப்பால் ரசிகர்களை மிரள விட்டனர் என்றால் ரகுவரனோ தனது வில்லத்தனத்தால் ரசிக்க வைத்தார். 1983-ல் வெளியான தேசிய விருது பெற்ற திரைப்படமான ஏழாவது மனிதன் படத்தில் அறிமுகமாகி அதன்பின் சில படங்களில் ஹீரோவாக நடித்தார் ரகுவரன்.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சிதம்பரமாக வந்து மிடில் கிளாஸ் ஆண்களை அப்படியே பிரதிபலித்தார். இந்தப் படம் இவருக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படமான புரியாத புதிர் திரைப்படத்தில் இவர் வில்லனாக மிரட்டி பேசிய ஐ நோ..ஐ நோ.. என்ற வசனத்தின் மூலம் பிரபலமாகி வில்லத்தனத்திலும் மிரட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து காதலன், பாட்ஷா, முதல்வன், அருணாச்சலம், அமர்க்களம், என் சுவாசக் காற்றே போன்ற படங்களில் தனது மிரட்டல் நடிப்பால் அனைவரையும் ரசிக்க வைத்தவர்.

ஹீரோக்களுக்குச் சமமாக வில்லத்தனத்தில் இவரையும் மக்கள் ரசித்தனர். பின்னர் உடல் நலக்குறைவால் கடந்த 2008-ல் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் இவ்வுலக வாழ்க்கைக்கு விடை கொடுத்தார். இன்றளவும் அவரை நாம் ரசிக்கக் காரணம் இவருடைய வில்லன் இடத்தை இன்னும் யாரால் நிரப்ப முடியவில்லை என்பது தான்.

வள்ளல் குணத்தில் மிரள வைத்த எம்.ஜி.ஆர்.. மெய்சிலிர்க்க வைத்த ஸ்டண்ட் மாஸ்டர்-ன் அனுபவம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் அனு நிகழ்ச்சியில் இவர் விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியபோது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்ற கேள்வி கேட்டபோது, சட்டென யோசிக்காமல் நடிகன் ஆனது தான் என்று பதில் கூறினார். மேலும் அவர் தொடரும் போது, “சிறியதாக ஒரு நிலத்தில் அதில் கடுமையாக உழைத்து கொஞ்சம் பயிர் செய்து அதைக் கொண்டு போய் சந்தையில் விற்று அந்தப் பணத்தில் உண்டு இரவில் தூங்கும் போது ஆண்டவனே மழை வரணும் என வேண்டிக் கொண்டு துணைக்கு ஒருவரையும் வைத்துக் கொண்டு, அருகில் ஆடு, மாடு, கோழிகளையும் வளர்த்து அவற்றிற்கும் உணவளித்து வாழ வேண்டும் எனஆசை. அதான் வாழ்க்கையும் கூட. நாம் வாழ்வதெல்லாம் வாழ்க்கை கிடையாது“ என எமோஷனலாக அந்த கேள்விக்கு பதிலளித்திருப்பார் ரகுவரன்.

அவரின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews