ஆலிலை கண்ணன் நமக்கு உணர்த்தும் சேதி என்னவென்று தெரியுமா?!

ஒவ்வொரு கடவுளும் தனது தோற்றத்தினால் நமக்கு ஒரு சேதியினை சொல்லி செல்கின்றனர். அதன்படி ஆலிலையின்மேல் படுத்திருக்கும் கிருஷ்ணரும் நமக்கொரு சேதியினை சொல்கிறார். அது என்னவென்று பார்க்கலாம்..


திருமால மார்க்கண்டேய முனிவருக்கு காட்சி தந்த கோலமே ஆலிலை கண்ணன் ஆகும். ஆல மர இலையில் குழந்தை வடிவில் கண்ணனாக திருமால் இருப்பார். அந்த இலை பெரும் பிரளயத்தில் மிதந்து கொண்டிருக்கும். மார்க்கண்டேய மகரிசிக்கு வில்லிப்புத்தூரில் இக்காட்சி காணக் கிடைத்ததாகவும். பிரளயக் காலத்தில் அனைத்து தேவர்களையும், உயிர்களையும், அண்டங்களையும் உள்ளடக்கி வயிற்றிலுள் சுமந்துகொண்டு கண்ணன் குழந்தையாக இருப்பதை அவர் கண்டதாகவும் நம்பப்படுகிறது. ஆலிலையின் மீது திருமால் படுத்திருப்பதால், ஆலிலை ஆதிசேஷனது அம்சமாகக் கருதப்படுகிறது

ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் ஞானகுருவான தட்சிணாமூர்த்தி நமக்கு ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பித்ரு தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆல மத்துக்கு கீழே அமர்ந்துதான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக்கொண்டான்.


ஆலிலைக்கென ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுத்த காரணமாகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின்மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை மீண்டும் பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான்.

பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப்போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என இதன்மூலம் நமக்கு பாடம் சொல்கிறான். இதுதான் கண்ணன் ஆலிலையில் படுத்திருக்கும் காரணமாகும்.

Published by
Staff

Recent Posts