முதல்வன் படப்பிடிப்பில் ஹோட்டல்காரரிடம் மாட்டிக் கொண்டு முழித்த ஏஆர்.ரகுமான்! நடந்த சம்பவமே வேற..!

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவையே திரும்ப பார்க்க வைத்தவர் ஏஆர்.ரகுமான்.தன்னுடைய தனித்திறமையான இசையால் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்தவர். ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏஆர்.ரகுமான் தன்னுடைய சுகமான இசையால் அனைவரையும் தன்பக்கம் ஈர்த்தவர்.

முதன் முதலில் இந்திய அளவில் ஆஸ்கார் விருதுகளை தட்டிச்சென்ற அற்புதமான கலைஞன். உலக அளவில் பிரபலமானாலும் தமிழை மிகவும் நேசிப்பவர் ரகுமான். அவரின் தமிழ் பற்று தேவைப்படும் இடங்களில் பிரதிபலிக்கும்.

தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் இசையமைத்தவர் தற்போது பொன்னியின் செல்வனில் தன் ஆட்டத்தை காட்டியிருக்கிறார். ரகுமான், மணிரத்னம், சங்கர் இவர்கள் கூட்டணி தான் பெரும்பாலும் நின்று பேசக்கூடியவனவாக இருந்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ரகுமான் மற்றவர்களையும் சரி தன்னிடம் வேலை பார்க்கும் உதவியாளர்களாக இருந்தாலும் சரி அனைவரிடமும் மிகவும் பணிவாக நடந்து கொள்ளக் கூடியவர். இந்த நிலையில் சங்கரின் முதல்வன் படப்பிடிப்பிற்கான இசை கம்போஸ் பண்ண ரகுமானுடன் அவரது உதவியாளர்களும் தென்காசி சென்றனராம்.

இரவு முழுவதும் கம்போஸ் முடித்து விட்டு காலையில் தென்காசியில் இருக்கும் ஒரு ஹோட்டலில் சாப்பிட போயிருக்கிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளருக்கு இவர்தான் ரகுமான் என்பது தெரியாதாம். அப்போது டீ வாங்குவதற்காக வேறொருவர் வந்திருக்கிறார்.

அவர் ரகுமானை பார்த்து விட்டு ஊருக்குள் போய் சொல்லியிருக்கிறார். ரகுமான் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது இவரை பார்ப்பதற்கு ஊரே கூடிவிட்டனராம். அதுவரைக்கும் அந்த உரிமையாளருக்கு தெரியாதாம். அதுபோக சாப்பிட்டு வெளியே வரும் போது ரகுமானிடம் அந்த உரிமையாளர் ‘ஹலோ சாப்பிட்ட இலையை யார் எடுத்துப் போடுவா?’ என்று சொல்லியிருக்கிறார்.

ரகுமானும் எடுத்துப் போட போக உடன் இருந்த உதவியாளர்கள் ஓடிப் போய் உரிமையாளரிடம் சொல்லியிருக்கிறார்கள். மேலும் அவர்கள் தான் இலையை எடுத்துப் போட்டனராம். அதன் பிறகு தான் உரிமையாளருக்கு உண்மை தெரிந்திருக்கிறது. இந்த சுவாரஸ்ய தகவலை ரகுமானிடம் 15 வருடங்கள் கூடவே இருந்து பணியாற்றிய தாஜ் நூர் என்பவர் கூறினார்.

Published by
Staff

Recent Posts