தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 72 வயதிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலிப் குமார் இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள ஜெய்லர் படத்தில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகி தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் ஓய்வு பெற்ற ஜெயிலராக டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு ரஜினி நடித்த அண்ணாத்த உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெறாத நிலையில் இந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவரை உலக அளவில் 564.35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சம்பளம் போக படத்தின் லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி கலாநிதி மாறன் அவர்கள் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினி அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ரஜினி அவர்களுக்கு காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் அதில் எவ்வளவு தொகை நிரப்பப்பட்டது என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.
மேலும் இரண்டு விதமான BMW சொகுசு கார்களை ரஜினி வீட்டு முன் நிறுத்திவிட்டு அதில் ரஜினி அவர்களுக்கு பிடித்த காரை தேர்ந்தெடுக்க சொல்லி கலாநிதி மாறன் அவர்கள் கூறியுள்ளார். இதை அடுத்து ரஜினிகாந்த் அவர்கள் 1.64 கோடி ரூபாய் மதிப்புள்ள BMW X7 காரை தேர்ந்தெடுத்ததாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதேபோன்று படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கும் கலாநிதி மாறன் அவர்கள் பரிசு தொகையாக காசோலை வழங்கியதோடு புதிய மாடல் Porsche காரையும் பரிசாக வழங்கியுள்ளார்.