இந்தியா

மாசம் 5 லட்சம் சம்பளம் வாங்குற மாப்பிள்ளை வரன்.. கிரிக்கெட்டிற்காக பெண்ணின் தந்தை செஞ்ச விஷயம்..

இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் எளிதாக நடந்தாலும் கூட, வீட்டார் வரன் பார்த்து வைத்து நடக்கும் திருமணங்கள் தான் பெரும்பாடாக இருக்கிறது. இணையதளங்களில் நிறைய திருமண தகவல் மையங்கள் தீவிரமாக இறங்கி செயல்பட்டாலும் நினைப்பது போல மாப்பிள்ளையோ, மணப்பெண்ணோ அமைவது கடினமான நிகழ்வாக உள்ளது.

ஒரு வரன் தங்களுக்கு பிடிப்பது போல அமைந்து பின்னர் வேலை, குடும்பம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஒத்துப் போவதற்கு முன்பாக திருமண ஆசையுடன் இருக்கும் பலருக்கும் அப்படி ஒன்று நடைபெற வேண்டாம் என்றும் தோன்றி விடும். அந்த அளவுக்கு இன்று குடும்பத்தினர் முடிவு செய்யும் திருமணம் பெரிய தலைவலியாக இருக்கும் சூழலில், மாதம் 5 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு மாப்பிள்ளை வரனை மாமனார் கிரிக்கெட்டிற்காக காக்க வைத்தது தொடர்பான விஷயம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

இந்தியர்களை பொறுத்தவரையில் குடும்பம், உணவு, வேலை என அடிப்படை வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களுக்கு கொடுக்கும் இடத்தை கிரிக்கெட் போட்டிகளிலும் கொடுத்து வருவார்கள். கிரிக்கெட் ஒரு மதம் போலவே இந்திய மண்ணில் பார்க்கப்படும் நிலையில், இந்தியர்கள் ஆடும் போட்டியை பார்த்தால் எந்த வேலையாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட்டுவிட்டு கிரிக்கெட்டை பார்ப்பதையே ஒரு முழு நேர வேலையாக வைத்திருப்பார்கள்.

இந்திய அணி ஜெயிக்கும் போது அவர்களை கொண்டாடுவதுடன், தோற்கும் போது வசை பாடி தீர்ப்பதும் அதே ரசிகர்கள் தான். இப்படி கிரிக்கெட் போட்டியை தங்களின் வாழ்நாளில் ஒரு அங்கமாக பார்க்கும் அளவுக்கு இந்தியர்கள் கிரிக்கெட்டுடன் பின்னி பிணைந்திருக்கும் நிலையில், ஒரு கிரிக்கெட் ரசிகர் தனது மகளுக்காக வந்த வரனை கிரிக்கெட்டின் பெயரில் தட்டிக் கழித்துள்ளார்.

ராகுல் என்ற நபர் ஒருவர் வரன் பார்க்கும் தளம் ஒன்றின் மூலம் ஒரு பெண்ணின் ப்ரொஃபைலை விரும்பி அதற்கு மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். தான் ஆண்டுக்கு 70 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் நாம் நிச்சயம் ஒத்துப் போவோம் என்று அதில் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, இது போன்ற தளங்கள் மூலம் வரன் தேடுபவர்கள் தங்களின் விவரங்களை பார்த்து யாராவது தொடர்பு கொண்டால் அதனை பார்த்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையை பார்த்து நகர்வார்கள்.

ஆனால், ராகுல் என்ற இளைஞர் அனுப்பிய மெசேஜ் பார்த்து ப்ரியங்கா என்ற அந்த பெண்ணின் தந்தையோ, தன்னை அறிமுகம் செய்ததுடன் கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்றும் அது முடிந்த பின்னர் பேசலாமே என்றும் மெசேஜ் அனுப்பி உள்ளார். தனது மகளுக்காக அருமையான வரன் வந்த போதிலும் அதற்காக நேரத்தை செலவழிக்காமல் கிரிக்கெட்டை முன்னுரிமையாக கண்ட நபரின் ரிப்ளை தொடர்பான புகைப்படங்கள் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

Published by
Ajith V

Recent Posts