ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு? திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆவேச பேச்சு…

புதிய நாடாளுமன்றத்தில் மன்னராட்சியில் இருந்து பின்பற்றப்படும் மரபான செங்கோல் சபாநாயகரின் இருக்கையில் வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொடக்க உரை நிகழ்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில் இதனைக் கண்டித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யும், மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மஹுவா மொய்த்ரா இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தனது உரையின் போது ஆவேசக் குரல் எழுப்பியுள்ளார்.

தனது ஆழமான பேச்சாலும், கருத்துக்களாலும் போராட்ட குணமுள்ள மஹுவா மொய்த்ரா கடந்த முறை எம்.பி.யாக இருந்தபோது அதானி குழுமத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டும், மத்திய அரசின் NIC வலைதளப்பக்கத்தின் பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை பகிர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.இதற்காக நாடாளுமன்ற ஒழுங்கு நெறிமுறைக் குழுவின் மேல்நடவடிக்கைக்கு ஆளாகி சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதன்பின் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் வேளையில் தினமும் கார சார விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று ராகுல்காந்தி சிவன் படத்தினைக் காட்டி பேசியது நாடு முழுக்க பேசப்பட்டு வரும் நிலையில் எம்.பி. மஹுவா மொய்த்ராவும் செங்கோல் குறித்துப் பேசி பரபரப்பினைக் கிளப்பியுள்ளார்.

மக்களவையில் சிவன் படத்தைக் காட்டி உரையாற்றிய ராகுல் காந்தி.. சபாநாயகர், அமித்ஷா கண்டனம்..

மன்னராட்சியில் அடையாளமாக இருந்த செங்கோல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு எதற்கு. ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சமாஜ்வாதி கட்சியைத் சேர்ந்த எம்.பி. ஆர்.கே.சவுத்ரியும் நாடாளுமன்றத்தில் செங்கோல் எதற்கு என்று கேள்வியெழுப்பி சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழனின் அடையாளமாக விளங்கிய செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது தமிழர்களின் ஆட்சி முறைக்கு பெருமை தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் தற்போது செங்கோல் விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Published by
John

Recent Posts