தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் சிறப்புகள்

2c096a6a8ec7e213c77fd177201d9ad0

தமிழ்நாட்டில் ஆஞ்சநேயர் கோவில்கள் நிறைய உள்ளது. பல இடங்களில் விஸ்வரூப தரிசனத்துடன் ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளது. இது போல விஸ்வரூப தரிசனத்துடன் பிரமாண்டமாக காட்சியளிப்பவர்தான் தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர். தூத்துக்குடி நெல்லை சாலையில் இரண்டு ஊருக்கும் நடுவில் இருப்பதுதான் தெய்வச்செயல்புரம் என்ற ஊர்.

இந்த ஊரில்தான் விஸ்வரூப கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். மிக சக்தி வாய்ந்த இந்த ஆஞ்சநேயரை அருகில் உள்ள தூத்துக்குடி, நெல்லை மக்கள் அடிக்கடி வந்து வணங்கி செல்வர். தூத்துக்குடி நெல்லை மெயின் ரோட்டிலேயே இவர் காட்சியளிக்கிறார்.

இந்த ஆஞ்சநேயர் பெயர் சுந்தர வரத ஆஞ்சநேயர் கோஇந்த கோவிலில் 77 அடி உயர விசுவரூப ஆஞ்சநேயர் கம்பீரமாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு தனிச்சிறப்பு உண்டு. இலங்கையில் ராவணனின் பிடியில் இருந்து சீதையை மீட்பதற்காக ராமர் படையெடுத்து சென்றார். அங்கு நடந்த போரின் போது, லட்சுமணன் மூர்ச்சையாகினார். இதனால் அவரை உயிர்ப்பிக்க வீர ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி வந்தார். அவர் மலையை தூக்கி வந்த போது, மலையில் இருந்த சிறு, சிறு கற்கள் 6 இடங்களில் விழுந்தன. அந்த இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் விசுவரூப தரிசனத்தில் காட்சி அளித்து வருவதாகவும், இந்த கற்கள் விழுந்த இடங்கள் சிறிய மலைக்குன்றாக காட்சி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி நாமக்கல், சுசீந்திரம் தாணுமலை, சென்னை பரங்கிமலை, திண்டுக்கல் சின்னாளம்பட்டி, தெய்வச்செயல்புரம், இலங்கை ஆகிய இடங்களில் இந்த 6 கோவில்கள் அமைந்து உள்ளன. இந்த கோவில்களில் மட்டுமே ஆஞ்சநேயர் விசுவரூபத்தில் காட்சி அளிக்கிறார். இந்த 6 இடங்களிலும் ஆஞ்சநேயர் மலையை நோக்கி நிற்பது போன்று சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நவகைலாயம், நவதிருப்பதி போன்று இந்த 6 ஆஞ்சநேயர் கோவில்களும் அமைந்து உள்ளன.

இந்த 6 கோவில்களிலும், தூத்துக்குடி அருகே உள்ள தெய்வச்செயல்புரத்தில் அமைந்து உள்ள 77 அடி உயர ஆஞ்சநேயர் உயரமானவர் ஆவார். இவர் வல்லநாடு மலையை நோக்கி காட்சி அளித்து கொண்டு இருக்கிறார். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமண தடை நீங்கும், கல்வி அபிவிருத்தி, செல்வம் பெருகும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews