சிவராத்திரியன்று முழு இரவு கண்விழித்து சிவனை துதிப்போருக்கு தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் தீரும். அதுமட்டுமின்றி அவருக்கு மட்டுமில்லாது, அவருக்கு பின் வரும் 21 தலைமுறையை சேர்ந்தவர்களுக்கும் முக்தி கிட்டும். அதனால், சிரத்தையுடன் இறை சிந்தனையோடு இறைவனை வழிபடுதல் வேண்டும். இந்த அவசரயுகத்தில் முழு இரவு கண்விழிக்க முடியாதவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் சிவராத்திரியன்று நள்ளிரவு 11:30 மணி முதல் 1 மணி வரை ‘லிங்கோதபவர்’ காலம் என சொல்லப்படும் அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் முழு இரவு கண்விழித்து வழிபட்ட அத்தனை நற்பலன்களும் நமக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
லிங்கோதபவர் நேரத்தில் வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியமாக வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி பஞ்சாட்சரங்களை பலநூறு முறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும் என்கின்றனர். சிவராத்திரி தினத்தன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்கவேண்டும். அதன்பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்துவிட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் உணவு உண்ண வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவன் கோவிலுக்குச் சென்று இரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது நிச்சயம்.