ஒவ்வொரு நாளும் வெற்றிகரமான நாளாய் அமைய பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்போம்!!

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தன் வேலைகளை தொடங்குபவன் வாழ்வில் வெற்றி பெறுவான். என்பது நம்பிக்கை. பிரம்மமுகூர்த்தம் என்றால் என்ன? எந்த நேரத்தினை பிரம்ம முகூர்த்தம் என அழைக்கபடுகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்..

சூரியன் உதிப்பதற்கு முன்பு இருக்கும் அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என சொல்வார்கள். உஷத் காலம் என்பது உஷஸ் என்னும் பெண் தேவதை தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பது ஐதீகமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் முக்கியமாக தூங்கக் கூடாது. தியானம் வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளை செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும். முக்கியமாக இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பல மடங்கு அதிக புண்ணியத்தை தரும் என ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

காலையில் கண் விழித்தால் உள்ளமும் உடலும் சுறுசுறுப்பாய் இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும். எந்த சத்தமும் இல்லாமல் பரபரப்பும் இல்லாமல் காரியங்கள் சிறப்பாக முடியும். அது மட்டுமில்லாமல் அதிகாலை நேரத்தில் சுத்தமான காற்று இருக்கும் மேலும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால் சுத்தமான காற்று சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

பெரும்பாலும் இந்துமக்கள் தேதி, கிழமை, நல்லநாள், யோகம் ஆகிய அனைத்தும் சரியாக இருந்தால்தான் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள். நல்ல நாள் கிடைத்தால் நல்ல நேரம் கிடைக்காது அதனால் நான் செய்ய நினைக்கும் காரியங்கள் அனைத்தும் ஏதாவது தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இதனை தவிர்க்க நாம் பிரம்மமுகூர்த்தத்தில் தேர்வு செய்வது நல்லது. பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரை. எந்த காரியங்களும் செய்வதாக இருந்தால் நல்ல நாள் பார்த்தால் மட்டும் போதும் நேரம் பார்க்க தேவையில்லை எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிரம்மமுகூர்த்தத்தில் தொடங்கலாம். இந்த அதிகாலை நேரத்திற்கு அவ்வளவு மகிமை இருக்கிறது.அதிகாலை நேரத்தில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும் விஞ்ஞானமும் கூறுகின்றது. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும் பொழுது நரம்புகளுக்கு தெம்பையும் உற்சாகத்தையும் தருகிறது. அதுமட்டுமல்லாமல் கண்களுக்கு ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் தருகின்றது. அதனால் தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.

இந்த அதிகாலை நேரத்தில் உடல் ஆரோக்கியத்தோடு  மன அழுத்தம் இல்லாமலும் பரபரப்பும் இல்லாமலும் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். உசத் தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப் பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவது விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் முதற்கொண்டு வேத விற்பன்னர்கள் வரை சொல்கின்றனர். 

தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம் என எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிரம்மமுகூர்த்தத்தில் செய்யலாம். அப்படி செய்வதால் எடுத்த காரியம் வெற்றியில் முடியும்.

கிரக தோஷம் ராகு-கேது தோஷம் களத்திர தோஷம் இருப்பவர்கள் தோஷ பரிகாரம் செய்வது மட்டுமில்லாமல் இவர்களுக்கு அதிக அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்தால், தம்பதிகளுக்கு இடையே பிரிவினை ஏற்படாது அவர்களின் வாழ்வு சிறக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.   பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்பொழுதும் சுபவேளைதான். இந்த நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டை செய்து நமது வேலையை செய்யத் துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம். 

பிரம்ம முகூர்த்த நேரம் அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரையாகும். 

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews