முதல் இரு அண்ணன்களை இழந்த சிவாஜி கணேசன்..யாரும் அறியாத நடிகர் திலகம் குடும்பத்தின் மறுபக்கம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி நிறைய பார்த்திருக்கிறோம். கேட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். ஆனால் அவரது குடும்பத்தினைப் பற்றி யாரும் அவ்வளவாக கேள்விப்பட்டது கிடையாது. தனது இளம் வயதிலேயே தனது மூத்த இரண்டு அண்ணன்களையும் விஷக் காய்ச்சலில் பலி கொடுத்து பின்னர் மூன்றாவது அண்ணன், தம்பி, தங்கையுடன் வாழ்ந்திருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

நடிகர் திலகத்தின் தந்தை சின்னையா மன்றாயார் நாகப்பட்டிணத்தில் ரயில்வேயில் கேங்க் மேனாக பணியாற்றிக் கொண்டிருந்தார். இவரது தாய் ராஜாமணி அம்மாள். சின்னையா மன்றாயர் சீர்காழியில் பணியாற்றிய போதுதான் இவர்களுக்கு முதல் மகனாக திருஞானசம்பந்த மூர்த்தி பிறந்தார். 63 நாயன்மார்களில் முதல்வரான திருஞானசம்பந்தர் பிறந்த சீர்காழியில் இவர் பிறந்ததால் அவருக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

இதனையடுத்து இவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க அப்போது சிதம்பரத்தில் பணிமாற்றம் ஏற்பட்டது. எனவே சிதம்பரம் நடராஜரின் கருவறைப் பெயரான கனகசபைநாதர் என்றபெயரை தங்களது இரண்டாவது மகனுக்குச் சூட்டினர். ராஜாமணி அம்மாள் மூன்றாவதாக மறுபடியும் பிரசவிக்க அப்போது மீண்டும் பதவி மாற்றம் பெற்று சின்னையா மன்றாயர் நாகப்பட்டினம் செல்ல, ராஜாமணி அம்மையார் தனது தந்தை வீடான விழுப்புரத்திற்கு வந்தார். இவர்களின் மூன்றாவது குழந்தைகக்கு விழுப்புரம் மயிலம் கோவில் முருகக் கடவுளின் பெயராக தங்கவேல் என்று பெயரிட்டனர்.

இதன்பிறகு நான்காவதாகப் பிறந்தவர் தான் நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அப்போது அவரின் தந்தை திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் பணிமாற்றம் பெற்று வந்ததால் மலைக்கோட்டை மாணிக்க விநாயகரின் திருப்பெயரான கணேசமூர்த்தி என்ற பெயரை தங்களது 4 வது மகனான நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வைத்தனர்.

இவர் பிறந்த பொழுதுதான் சின்னையா மன்றாயர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றதால் அங்கு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட போது செவித் திறனை இழந்தார். அப்போது வறுமையின் பிடியில் சிக்கிய ராஜாமணி அம்மையார் கறவை மாடு வாங்கி பால் விற்று தங்களது பிள்ளைகளைக் காப்பாற்றினார்.

இந்நிலையில் சிறையிலிருந்து சின்னையா மன்றாயர் விடுதலை பெற்று மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ, திடீரென பேரிடியாய் அவர்கள் குடும்பத்தில் விஷக் காய்ச்சல் தாக்கி முதல் இரண்டு அண்ணன்களும் இறந்தனர். இந்தச் சோகம் அவர்களை பெரிதும் பாதிக்க மூன்றாவதாக தங்கவேல் மற்றும் கணேசமூர்த்தியைக் காப்பாற்றும் பொருட்டு பல்வேறு நேர்த்திக் கடன்களை வைத்தனர்.

அந்த நேர்த்திக்கடன் படி தங்களுக்கு அடுத்து பிறக்கும் குழந்தைக்கு திருச்சி வயலூர் முருகன் பெயரான சண்முகம் என்பதையும், திருமலை திருப்பதிக்கு ஆண் பிறந்தால் பாலாஜி வேங்கட நம்பி என்றும், பெண் பிறந்தால் பத்மாவதி என்றும் பெயர் வைப்பதாக வேண்டிக் கொண்டனர். அதன்படியே சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக பிறந்தவருக்கு சண்முகம் என்றும், இறுதியாகப் பிறந்த தங்கைக்கு பத்மாவதி என்றும் பெயரிட்டனர்.

உலகநாயகன் கமல் திரை வரலாற்றில் மிஸ் பண்ணிய படம்.. அலேக்காக தூக்கி ஹிட் கொடுத்த நெப்போலியன்

இவ்வாறு அண்ணன் தங்கவேலும், கணேசனும் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பிற்கு தள்ளப்பட சிவாஜி கணேசன் நாடகத்திலிருந்து சினிமாவிற்கு வந்து குடும்பத்தின் நிலையை மாற்றினார். பொருளாதார ரீதியாக மீண்டும் அவர்கள் குடும்பம் தழைத்தது. இதன்பிறகு சிவாஜி கணேசன் குடும்பத்தில் அண்ணன் தங்கவேல் குடும்ப சொத்தைப் பாதுகாக்கும் பொறுப்பிலும், தம்பி சண்முகம் சிவாஜி கணேசனின் கால்ஷீட் உள்ளிட்டவற்றையும் மேற்கொண்டு வந்தனர்.

சொத்துக்களை சகோதரர்கள் பார்த்துக் கொள்ள தன் வாங்கிய தியேட்டரை தங்கை பத்மாவதி கணவர் வேணுகோபாலை நிர்வகிக்கக் கொடுத்துவிட்டார். இவ்வாறு நடிகர் திலகத்தின் சகோதரர்கள் அவருக்கு வலது கரமாகவும், இடது கரமாகவும் விளங்கிய நிலையில் 1986-ல் சண்முகம் மரணமடைய தொடர்ந்து 1989-ல் தங்கவேலுவும் மரணமடைந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews