செய்திகள்

தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்துவதற்கு உதவியாக யூடியூபர் ஒருவர் அங்கு பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார். இந்த கடை மூலமாக 267 கிலோ தங்கத்தை கடத்த அந்த யூடியூபரும் அவரது கடை ஊழியர்களும் உதவி உள்ளனர். சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தங்க கடத்த யூடியூபர் எப்படி உதவினார் என்பதை பார்ப்போம்.

சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் பரிசு கடை ஒன்று இலங்கை தங்கம் கடத்தல் கும்பலுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தது அம்பலமாகியுள்ளது. கடையின் உரிமையாளர் முகமது சபீர் அலிக்கு தங்கம் கடத்துவதற்கு உதவுவதற்காகவே அங்கு கடை அமைத்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தின் புறப்படும் லவுஞ்சில் , ஏர்ஹப் என்ற பெயரில் முகமது சபீர் அலி என்பவர் நினைவுப் பரிசு பொருள் விற்பனை கடையை அமைத்தார் . அபுதாபியில் வசிக்கும் இலங்கை தங்கக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர், கடைக்கான லீஸ் தொகையான 70 லட்சத்தை கொடுத்துள்ளார்.

29 வயதான முகமது சபீர் அலி யார் என்றால் ஒரு யூடியூபர். ஷாப்பிங் பாய்ஸ் என்ற பெயரில் சேனல் நடத்தி வந்துள்ளார். அவருக்கு கடை நடத்தி எந்த அனுபவமும் இல்லை.. ஆனாலும் தங்கம் கடத்தலுக்கு உதவும் வகையில் சென்னை விமான நிலையத்தில் கடை வைத்து கொடுத்துள்ளது சர்வதேச தங்கக் கடத்தல் கும்பல்.

முகமது சபீர் அலி வைத்துள்ள கடையில் அவர் மற்றும் ஏழு பேர் பணியில் இருந்தனர். அவர்களுக்கு தங்கம் கடத்துவது குறித்து சர்வதேச கும்பல் பயிற்சியும் கொடுத்துள்ளது. இவர்கள் தான் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து தங்கத்தைப் பெற்று விமான நிலையத்திற்கு வெளியே உள்ள புரோக்கர்களிடம் கொடுத்தனர். இதற்காக முன்னாள் யூடியூபர் மற்றும் அதன் ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ₹ 3 கோடி கமிஷன் கிடைத்துள்ளதாம்.

ஜூன் 29 அன்று , துபாயில் இருந்து ரூபாய் ஒரு கோடி மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தை இலங்கை பயணி ஒருவர் கடந்து கொண்டு வந்து, சென்னை விமான நிலைய கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு வெளியில் வந்த போது, சுங்க அதிகாரிகள், அவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் பரிசு பொருள் கடை பற்றி அவர் கூறியிருக்கிறார்.

இதையடுத்து பரிசு பொருள் கடையில் வேலை செய்யும் ஊழியர்களை பற்றி விசாரித்த சுங்கத்துறை அதிகாரிக்கு இதுபோல் அடிக்கடி கடத்தல் நடந்திருக்கலாம் என சந்தேகித்தார். இதையடுத்து சென்று பார்த்த போது, கடையில் 1 கிலோ தங்கப் பொடியைக் கண்டுபிடித்தார். அப்போது தான் அவர்களின் திட்டம் அம்பலத்திற்கு வந்தது. ஊழியர் மற்றும் தங்கத்தை கடத்திய போக்குவரத்து பயணி கைது செய்யப்பட்டனர், அதைத் தொடர்ந்து அலி மற்றும் 9 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

பரிசு பொருள் விற்பனை கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் ஒப்பந்த ஊழியர்களாக இருந்துள்ளார்கள். இவர்களிடம் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்) வழங்கிய அடையாள அட்டைகள் இருந்துள்ளன. இந்த அடையாள அட்டைகள் காரணமாக, அவர்கள் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

இதை வைத்துதான்  பரிசு பொருள் விற்பனை கடை ஊழியர்கள் தங்கம் கடத்தலுக்கு உதவி உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில், ரூபாய் 167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Published by
Keerthana

Recent Posts