டிசம்பர் மாதம் சீனாவில் கால் பதித்த கொரோனா, தற்போது உலகின் பல நாடுகளையும் ஆட்டிப் படைத்து வருகின்றது. சீனாவினைத் தாண்டி, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளை போதும் போதும் என்னும் அளவு வெச்சு செய்து விட்டது.
கடந்த மாதம் இந்தியாவிலும் கொரோனா தலைதூக்க, கொரோனா பரவாமல் தடுக்க இந்திய அரசு மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பித்தது, தற்போது இந்தியாவில் நிலைமை தீவிரமானதன் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாளை முதல் ஐ.டி. நிறுவனம் உள்பட சில தொழில்துறைகள் செயல்படலாம் என மத்திய அரசு எடுத்துள்ள முடிவினை பலரும் எதிர்த்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “ஊரடங்கு கடைபிடிக்கப்படும் இந்த சூழ்நிலையிலேயே நம்மால் கொரோனாவினை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
நாளை முதல் ஊரடங்கை தளர்த்தலாம் என்ற முடிவு உண்மையில் ஒரு தவறான ஒரு முடிவாகும். கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர குறைந்தது 2 மாதங்கள் ஆகும் என்ற நிலையில் இதுபோல் ஒரு முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கின்றது.
ஏழை, எளிய மக்களுக்கும் உயிர்தான் முக்கியம் என்ற நிலையில் மிகவும் கடுமையான இந்த சூழலை எதிர்கொள்கையில், ஊரடங்கை ஐ.டி. கம்பெனிகளுக்காக தளர்த்துவது நியாயம் கிடையாது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கொரோனா தொற்று பரவும் வேகம் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும். நவீன மருத்துவ வசதி கொண்ட அமெரிக்காவே திணறுகையில் இந்தியாவில் நிலைமை தீவிரமானால் சரி செய்வதற்கான வாய்ப்புகள் என்பது ஒரு சதவீதம் கூட கிடையாது.” என்று கூறியுள்ளார்.