பாவம் போக்கும் சித்ராகுப்தன் வழிபாடு

சித்ரா பௌர்ணமியன்று நடக்கும் ஆன்மீக நிகழ்வுகளை சொல்லி மாளாது. அவற்றில் ஒன்றுதான் சித்ர குப்தன் வழிபாடு. யார் இந்த சித்ர குப்தன்னு தெரியுமா?! எமதர்ம ராஜாவின் பி.ஏ. நம்முடைய பாவ, புண்ணிய கணக்குகளை குறித்து வைத்து, அதற்கேற்றவாறு சொர்க்கம், நரகமென நாம் இறந்தபின் செல்லவேண்டிய இடத்தை எடுத்து சொல்வர். நம்முடைய ஆயுள் எப்போது முடியுமென எமதர்மனுக்கு நினைவுப்படுத்துவதும் இவரே! தன்னை வணங்குபவர், வணங்காதவர் என பேதம் பாராமல், எந்தவித சஞ்சலத்துக்கும் ஆட்படாமல் எள்முனை அளவும் தன் கடமைல இருந்து தவறாமல் கடமையை ஆற்றிவருபவர் சித்திரகுப்தன்.

நாளை சித்ரா பௌர்ணமி. நாளைய தினம் சித்ரகுப்தனை வேண்டி வணங்கினால் மலையளவு செய்த பாவம் தீரும். கடுகளவு செய்த புண்ணியம் வளரும் என்பது ஐதீகம்.

வட இந்திய கதை…
கோடிக்கணக்கான மக்களின் பாவ புண்ணியத்தை நிர்வகிக்க , தனக்கு துணையாக ஒருவர் வேண்டுமென எமதர்மன் உணர்ந்து சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் பிரம்மாவிடம் கட்டளையிட, சிவபெருமானின் கட்டளையை சூரியன் மூலமாக நிறைவேற்ற சூரியனுக்குள் அக்னியை உருவாக்கினார். சூரியன் வானில் தோன்றும்போது ஒரு வானவில் உண்டானது. அந்த வானவில் நீளாவதி என்ற அழகிய பெண்ணாய் உருமாறியது. நீளாவதியின் அழகில் மயங்கி அவளை மணக்கிறார். அதன் விளைவாய் சித்திரகுப்தன் பிறந்தார், சித்திரை மாதத்தில் பிறந்ததால் சித்திரகுப்தன் என்று பெயர் உண்டாயிற்று. கர்ணன் கவசகுண்டலங்களோடு பிறந்த மாதிரி ஏடும், எழுத்தாணியும் கொண்டு பிறந்ததாய் சொல்கின்றனர். சித்திரை என்றால் மனம், அப்தம் என்றால் மறைவு என்று பெயர். மனிதர்களின் மனதில் மறைவாய் உள்ள விசயங்களை எழுதுவதால் இவருக்கு இப்பெயர் உண்டானதாய் சொல்கின்றனர். இவருக்கு துணையாக புறா, ஆந்தை, நான்கு கொண்ட நாய்களை எமதர்ம ராஜா நியமித்தார். பிரபாவதி, நீலாவதி, கர்ணீகைன்னு மூன்று தேவியரோடு, மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர்களின் விதியை வெகு துல்லியமாய் கணக்கிட்டு வருகின்றார் என புராணங்கள் சொல்லுது.

1aef0591757a1d425ec1fdde4302e701-1

அனைத்து ஜீவராசிகளின் பாவ, புண்ணியத்தை கணிக்க ஒருவரை நியமிக்க ஈசன் யோசித்துக்கொண்டிருந்த வேளையில், பார்வதிதேவி ஒரு பலகையில் அழகான ஒரு ஏடும் எழுத்தாணியும் கொண்ட குழந்தையின் படத்தை வரைந்துக்கொண்டிருந்தாள். அப்படத்தை கண்ட ஈசன் அப்படத்திற்கு உயிர் கொடுத்து மனிதர்களின் பாவ புண்ணியத்துக்கேற்ப என்ன தீர்ப்பை வழங்கலாமென எமதர்ம ராஜாவுக்கு கணக்காளர் பதவியில் அமர்த்தினார். சித்திரத்துக்கு உயிர் கொடுத்ததால் சித்ரகுப்தன் எனப்பெயர் பெற்றதாய் பரவலாய் சொல்லப்படும் கதைகளில் ஒன்று. விரதமிருந்து சித்திரகுப்தனை வழிப்படுவோரின் பாவச்சுமை ஏறாதென சிவப்பெருமான் வாக்களித்தார். சித்ரக்குப்தனின் திருமணநாளும் சித்ரா பௌர்ணமியே.

சித்ரகுப்தனின் பிறப்புக்கு இன்னொரு கதை சொல்லப்படுகிறது. அகலிகையின் சாபத்தால் இந்திரனுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போனது. இக்குறை தீர சிவபெருமானை நோக்கி இந்திராணியும்,இந்திரனும் கடுந்தவம் இருந்தனர். அவர்களின் தவத்துக்கு இரங்கினாலும், பத்தினி சாபத்தை தன்னால் போக்க முடியாததால் சித்ரகுப்தனை காமதேனுவின் வயிற்றில் கருவாய் வளரச்செய்தார். குழந்தை பிறந்ததும் இந்திரனும், இந்திராணியும் சித்ரகுப்தனை வாங்கி சென்றதாகவும் சொல்லப்படுது. இதனாலாயே இவரின் அபிஷேகத்துக்கும், நைவேத்தியத்துக்கும் பசும்பால், தயிர், நெய் ஆகியவை பயன்படுத்துவதில்லை.

சித்திரகுப்தனை தரிசிக்கும்போதே நமது வினைகள் நம் முன் நிழலாடும். இதுவரை மனதறிந்து நாம் செய்த பாவ வினைகள் நினைவிற்கு வரும். இனி இப்படிப்பட்ட பாவங்கள் செய்யக்கூடாதென நம்மை உணர வைக்கும். இதேப்போல தெரிந்தும், தெரியாமல் செய்த புண்ணியத்தையும் இம்மி பிசகாமல் எழுதி வைக்கும் இவரின் செயலை எண்ணி வியக்க வைக்கும். இவர்தான் கேது பகவானுக்கு அதிபதியாகும்.

இவரை, பக்கம் பக்கமாய் மந்திரங்கள் கொண்டு ஜெபிக்க வேண்டாம். செய்த தவறுகளை எண்ணி மலையளவு செய்த பாவத்தினை கடுகளகாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எண்ணி எம்மை காப்பாற்றுங்கள் என வேண்டினாலே போதும். இவர்க்கு பானகம் பிடித்த நைவேத்தியம். இத்தினத்தில், எண்ணெய் தேய்த்து குளித்தலும் நல்லது. இதுவரை செய்த பாவங்களை இன்றோடு தலைமுழுகி விடுகிறேன் என்று இதற்கு பொருள். இத்தினத்தில் நீர்தானம், பேனா, பென்சில், நோட்டுப்புத்தகம் தானம் செய்வது சிறந்தது. கடம்பூர், கோடங்கிப்பட்டி உள்ளிட்ட 14 இடங்களில் சித்திரகுப்தனுக்குக் கோவில்கள் இருக்கு. காஞ்சீபுரத்தில் இருக்கும் சித்திரகுப்தன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.

நாளைய தினம் சித்ராகுப்த வழிபாடு செய்வோம். பாவம் தீர்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews