இறைவனுக்கு கற்பூர தீபாரதனை காட்டுவது ஏன்?!

நம் வீட்டில், கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.

b82eaa79f9bd61347a743baf2bd6539b

கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது. மனிதன் இறந்த பிறகும் இதே நிலைதான். எஞ்சும் சாம்பல்கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது. எனவே இந்த தத்துவத்தின் படி எதுவுமே மிச்சமில்லாமல் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே இதன் தத்துவம்.

அதேப்போல் கருவறையிலிருக்கும் இறைமூர்த்தம் கல்லினால் வடிக்கப்பட்டது. பலவித அபிஷேகங்கள் செய்வதால் நாளடைவில் சிலாரூபம் அடர்கருமை நிறத்துக்கு மாறிடும். இறைவனின் அழகை முழுமையாய் கண்டு ரசிக்கவே கற்பூர ஒளி காட்டப்படுகிறது.

கற்பூர வெளிச்சத்தில் இறைவனின் அழகு தெள்ளத்தெளிவாய் தெரியும். அதேப்போல், கற்பூரம் எரிந்துமுடிந்தவுடன்
காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக்கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடு வதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது.

கற்பூர தீபம் இடையில் நிற்காமல் முழுமையாக எரிந்து தானே அடங்கவேண்டும். பிரகாசமாக வலஞ்சுழித்து எரிவது மிகவும் நல்லது. தீபம் நடுங்கக்கூடாது. ஆராதனை முடியும்வரை எரியக் கூடிய அளவுக்குப் போதிய கற்பூரத்தை ஆரத்தியில் நிரப்புவது மிக முக்கியம்.

தீப ஆராதனையின் போது காற்றால் மோதப்பட்டோ அல்லது எதோ ஒரு காரணத்தாலோ தீபம் அணைந்துவிட்டால் உடனே வேறு கற்பூரத்துண்டுகளை வைத்து எரித்து, மீண்டும் தீப ஆராதனை காட்ட வேண்டும். வாயால் ஊதித் தீபத்தை அணைக்கக்கூடாது. கற்பூர தீபத்தை அணைத்துச் சத்யம் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதை மீறவே கூடாது.

கற்பூர தீப ஆராதனையின்போது இறைவனுக்குச் சூட்டிய மலர் கீழே விழுவதும், பல்லி குரல் கொடுப்பதும், மற்றவர்கள் எதேச்சையாக பேசும் நல்ல சொற்களைக் கேட்பதும், இறைவன் திருமுன் வைத்திருக்கும் எலுமிச்சம்பழம் தனக்குமுன் உருண்டு வருவதும் மங்களமாகும்.

கற்பூர தீபம் எரியத் தொடங்கிய நேரம்முதல் அது குளிரும் நேரம் வரை இறைவனது சிலைகளில் படங்கள் முதலிய இறைத் தொடர்பான அனைத்துப் பொருள்களிலும் தெய்வ சாநித்யம் உச்சநிலையில் விளங்குகிறது. அந்தக் குறிப்பிட்ட சில நொடிகளில் மனப்பூர்வமாக இறைவழிபாடு செய்யக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews