3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூபில் டிரெண்டிங் நம்பர் 1ல் இருக்கும் அரண்மனை 4 படத்தின் ட்ரைலர்…

அரண்மனை திரைப்படத் தொடர் இயக்குனர் சுந்தர்.சி இயக்கி தயாரித்த அமானுஷ்ய திகில் திரைப்படமாகும். ஒரு ஜமீன் அரண்மனையை சுற்றி கதைக்களத்தை அமைத்திருப்பார் இயக்குனர். ஏற்கனவே அரண்மனை திரைப்படத்தின் மூன்று பாகங்கள் வெளியான நிலையில் தற்போது ‘அரண்மனை 4’ வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸாக உள்ளது.

அரண்மனை திரைப்படத்தின் 1 ஆம் பாகம் 2014 இல் வெளியானது. இதில் இயக்குனர் சுந்தர். சி, ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா ஜெரேமியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு குடும்பத்திற்கு சொந்தமான பூர்வீக அரண்மனையை விற்க கதாநாயகனின் குடும்பம் வருகிறது. வந்த இடத்தில் கதாநாயகனான வினய் கிராமத்து பெண்ணான ஹன்சிகாவை காதலிக்கிறார். அம்மனின் நகைககளை திருடும் கோவில் நிர்வாக கும்பலை கண்டுபிடிக்கிறார் ஹன்சிகா. அவரை கதாநாயகனுடன் சேர விடாமல் கொன்றுவிடுகிறது அந்த கும்பல். அதன் பிறகு பேயாக வந்து கதாநாயகி என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை. இந்தப் படம் வணீக ரீதியாக வெற்றி பெற்று இயக்குனர் சுந்தர். சி அவர்களை அடுத்தடுத்து பாகங்களை எடுக்கத் தூண்டியது என்று கூறலாம்.

அடுத்ததாக அரண்மனை திரைப்படத்தின் 2 ஆம் பாகம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. இதில் இயக்குனர் சுந்தர். சி, சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா மோத்வானி, பூனம் பஜ்வா, கோவை சரளா, ராதாரவி, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். செல்லமாக வளர்த்த மகளான ஹன்சிகாவை அவள் காதல் திருமணம் செய்ததற்காக வாயும் வயிறுமாக இருக்கும் மகளை கவுரவ கொலை செய்து விடுகின்றனர். தன்னை கொன்ற குடும்பத்தை பழி வாங்க பேயாக வரும் ஹன்சிகா என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை. இந்தப் படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

பின்னர் அரண்மனை திரைப்படத்தின் 3 ஆம் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் இயக்குனர் சுந்தர். சி, நடிகர் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். தனது காதலனுடன் சேர விடாமல் சந்தேகத்தால் தன்னையும் தன் குழந்தையையும் கொன்ற குடும்பத்தை கொல்ல வரும் பேயின் கதை ஆகும். இந்த படம் சற்று கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தநிலையில், இயக்குனர் சுந்தர்.சி ‘அரண்மனை 4’ பாகத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இயக்குனர் சுந்தர். சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். தற்போது படக்குழுவினர் இப்படத்தின் ட்ரைலரை விழா எடுத்து பிரம்மாண்டமாக வெளியிட்டனர். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் 3 மில்லியன் பார்வையார்களைக் கடந்து யூடியூபில் ட்ரெண்டிங் நம்பர் 1-ல் இருக்கிறது. இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...