என்னை மன்னிச்சுடுங்க.. பெரிய தப்பு செஞ்சுட்டேன்.. இயக்குனர் சரணிடம் மன்னிப்பு கேட்ட ஏ.ஆர். ரஹ்மான்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சரண். இவர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் இணைந்த சரண், அமர்க்களம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இதன் பின்னர், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே ஜே, இதயத் திருடன், வட்டாரம் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கி மக்கள் மத்தியில் அதிகம் பெயர் எடுத்திருந்தார் சரண். அதிலும் கமல்ஹாசன் நடிப்பில் சரண் இயக்கிய ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படம் காலம் கடந்து நிலைத்து நிற்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது.

காமெடி, செண்டிமெண்ட் என சரண் மற்றும் கிரேசி மோகன் கூட்டணியில் உருவான வசூல்ராஜா எம்பிபிஎஸ், அந்த அளவுக்கு மக்கள் மனதை வெகுவாக கவர்ந்திருந்தது. அதே போல அஜித் குமாருடன் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து பணிபுரிந்திருந்த இயக்குனர் சரண், கடைசியாக அஜித்தி ன் அசல் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

சரண் இயக்கத்தில் ஆயிரத்தில் இருவர், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்கள் கடைசியாக வெளியான சூழலில் இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதனையடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வருகிறார் சரண்.

இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன்னிடம் ஒரு முறை மன்னிப்பு கேட்டது பற்றி சில கருத்துக்களை நேர்காணல் ஒன்றில் இயக்குனர் சரண் தெரிவித்துள்ளார். அவர் இயக்கத்தில் உருவான அல்லி அர்ஜுனா என்ற படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் மனோஜ் பாரதிராஜா, ரிச்சா பல்லோட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில், ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாகி இருந்தது.

அல்லி அர்ஜுனா திரைப்படம் வெளியான சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு சரண் இயக்கத்தில் அடுத்த திரைப்படமான ஜெமினி வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருந்தது. ஆனால் அதற்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளியான அல்லி அர்ஜுனா படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. அந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அனைத்து பாடல்களுமே அவர் ஏற்கனவே இந்தி திரைப்படங்களில் உருவாக்கிய டியூன்கள் தான்.

அதனைத் தான் அவர் அல்லி அர்ஜுனா திரைப்படத்தில் பயன்படுத்தி தமிழ் பாடல்கள் உருவாக்கி இருந்தார். அப்படி இருக்கையில் அல்லி அர்ஜுனா படத்தின் ரீ ரெக்கார்டிங்கின் போது படத்தை பார்த்து விட்டு மிகவும் ரசித்த ஏ ஆர் ரஹ்மான், இயக்குனர் சரணிடம், “என்னை மன்னிச்சுக்கோங்க. படம் இந்த அளவுக்கு அருமையாக வரும் என தெரிந்திருந்தால் நிச்சயம் புது பாடல்களையே உருவாக்கி கொடுத்திருப்பேன். என்னை மன்னித்து விடுங்கள்” என மனம் வருந்தி சரணிடம் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews