விபத்தில் சிக்கிய அஜித் குமார்.. அவர் நடிக்க இருந்த படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த விக்ரம்..

தமிழ் சினிமாவில் ஃபேமிலி ஆடியன்ஸுக்காகவே படம் எடுத்த இயக்குனர் என்றால் விக்ரமனை கைகாட்டி விடலாம். படத்தில் வரும் எமோஷனல் காட்சிகள் அனைத்தும் காலம் கடந்து நிலைத்து நிற்கக் கூடியவை. அவர் இயக்கிய முதல் படமான புது வசந்தம், விக்ரமனை ஒரு சிறந்த இயக்குனர் என நிலைப்படுத்தியதோடு தமிழக அரசின் விருதுகள் மற்றும் ஃபிலிம்பேர் விருதினையும் வென்றிருந்தது.

இதன் பின்னர் விக்ரமனின் கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம் உள்ளிட்ட திரைப்படங்கள் சிறந்த வெற்றிப்படமாகவும் மாறி இருந்தது. இன்று தளபதி என இந்திய மக்களால் அறியப்படும் நடிகர் விஜய்யின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதும் இயக்குனர் விக்ரமன் தான். அவர் இயக்கிய பூவே உனக்காக படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஹீரோ கதாபாத்திரம் ஏற்று விஜய் நடித்த பின்னர் தான், அவரது சினிமா பயணமும் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது.

இதனைத் தொடர்ந்து, விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த சூர்யவம்சம், விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல ஆகிய திரைப்படங்கள், தற்போது தொலைக்காட்சிகளில் போட்டால் கூட 2 K கிட்ஸ் வரை அமர்ந்து பார்க்கும் அளவிற்கு குடும்பத்தினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படமாகும். இதில், வானதைப்போல படத்திற்கு தேசிய விருது கிடைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும்,சூர்யா, அஜித் குமார், விக்ரம், மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களையும் விக்ரமன் இயக்கி உள்ளார்.

இதில் சூர்யா நடித்து வெளியான உன்னை நினைத்து திரைப்படம், முதலில் விஜய் நடித்து பின்னர் சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலக, அவருக்கு பதிலாக சூர்யாவை வைத்து விக்ரமன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் லைலா, சினேகா உள்ளிட்டோரும் இணைந்து நடித்திருந்தனர். மேலும் அஜித் குமார் மற்றும் கார்த்திக் ஆகியோரை வைத்து விக்ரமன் இயக்கி இருந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படமும் தமிழக அரசின் விருதுகளை வென்றிருந்தது.

முன்னதாக அஜித் குமாரை வைத்து ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என்ற படத்தை விக்ரமன் இயக்குவதற்கு சுமார் 4 ஆண்டுகள் முன்பாகவே அவரை வைத்து இன்னொரு படத்தை இயக்க முடிவு செய்திருந்தார். ஆனால், அந்த படப்பிடிப்பு நேரத்தில் நடிகர் அஜித் குமாருக்கு விபத்து ஒன்று ஏற்பட்ட்டதாக தகவல் கூறுகின்றது. இதனால், அவருக்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைக்கவும் விக்ரமன் நினைத்துள்ளார்.

அதன்படி, நடிகர் விக்ரமை அஜித்திற்கு பதிலாக ஒப்பந்தம் செய்து விக்ரமன் இயக்கிய படம் தான் ‘புதிய மன்னர்கள்’. இளைஞர்கள் சிலரை மையப்படுத்தி இந்த படத்தை அவர் இயக்கி இருந்த சூழலில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். விக்ரமன் படத்தில் நடிப்பதாக இருந்து அப்போது முடியாமல் போனதால், அவருடன் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என விரும்பிய அஜித் குமார், பின்னர் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...