உங்கள் வீட்டில் அனைத்து வளங்களும் பெருக ஆடிப்பெருக்கு அன்று இவ்வாறு பூஜை செய்யுங்கள்!

ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 என்பது தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். ஆடி மாதம் அம்மனுக்கு விசேஷமான மாதம். மேலும் இந்த ஆடி மாதம் விவசாயிகளுக்கும் மிக முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் தான் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரினை பயிரிடத் தொடங்குவார்கள் அதைத்தான் ஆடிப்பட்டம் தேடி விதை என்று கூறுவது உண்டு. ஆடிப்பெருக்கு காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஒரு விழாவாக கருதப்படுகிறது. இன்றும் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் பெரும்பாலும் காவேரி நீர் பாசனத்தை தான் நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் ஆடிப்பெருக்கு அன்று கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு ஆற்று நீரில் நீராடி பின் காப்பரிசி, கலவை சாதம் ஆகியவற்றை ஆற்றங்கரையில் படையல் இட்டு சுற்றத்தாரோடு ஆற்றங்கரையில் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டு விவசாயம் செழிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.

adi peruku 4

இந்த ஆடிப்பெருக்கு அன்று காவேரி ஆற்றங்கரையில் பெருமாளுக்கு சீதனம் அளிக்கும் வகையில் அம்மா மண்டபத்தின் படித்துறையில் இருந்து பட்டுச்சேலை, தாலிக்கயிறு, பிற மங்களப் பொருட்கள் ஆகியவற்றை ஆற்றில் விடுவது உண்டு.

திருமணம் ஆகி புதிதாக தாலிக்கயிறு மாற்ற வேண்டும் என்று விரும்பும் பெண்கள் இந்த நாளில் மாற்றுவது நல்லது. புதிதாக திருமணம் ஆன பெண்கள் காவேரி கரையில் அமர்ந்து மஞ்சளில் பிள்ளையார் பிடித்து இறைவனை வணங்கி தாலிக் கயிறு மாற்றிக் கொள்வர்.

adi peruku 3

நதிக்கரைக்குச் சென்று இறைவனை வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே காவிரி தாயை நினைத்து வழிபட்டு பூஜை செய்து தாலி கயிறை மாற்றிக் கொள்ளலாம்.

வியக்க வைக்கும் ஆடி வெள்ளியின் மகத்துவமும் சிறப்புகளும்!!!

பூஜை அறையில் தாம்பூலத்தில் அல்லது வாழை இலையினை விரித்து வெற்றிலை பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, பழங்கள் ( குறிப்பாக நாவல் பழம் ) காப்பரிசி, சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும். நதிக்கரைக்கு செல்ல முடியாததால் பூஜை அறையிலேயே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் துளசி இலைகள், ஏலக்காய், பச்சை கற்பூரம், மஞ்சள் ஆகியவற்றை இட்டு அந்த நீரினை காவிரித்தாயாக நினைத்து ஐந்து முக விளக்கினை ஏற்றி வழிபடலாம். சர்க்கரைப் பொங்கலோடு புளியோதரை, எலுமிச்சை சாதம் என உங்களால் முடிந்த வேறு சில கலவை சாதங்கள் வைத்து நெய்வேத்தியம் செய்து வழிபடலாம். பூஜை, கற்பூர ஆரத்தி செய்து பின்பு. இலையில் உள்ள தாலி கயிற்றை மாற்றி மாங்கல்யத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து அணிந்து கொள்ளலாம். ஆடிப்பெருக்கன்று வாங்கும் பொருள் அனைத்தும் பெருகும் என்று கூறுவார்கள்.

adi peruku

தங்கம் வெள்ளி என்று வாங்கி குவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் வீட்டில் உணவு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்று அரிசி, பருப்பு, கல் உப்பு, மஞ்சள், சர்க்கரை இவற்றை வாங்கி வைத்தல் நல்லது. ஆடிப்பெருக்கு நன்னாளில் வேண்டும் வளங்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இறைவனை பக்தியுடன் வேண்டி ஆடிப்பெருக்கு நன்னாளில் பயன் பெறுங்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews