அப்பாவின் பேச்சை மீறி ஆரம்பித்த பிசினஸ்.. இன்று கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலத்தின் மகள்!

திரைத் துறையில் இருக்கும் பல பிரபலங்களின் வாரிசுகள் பெரும்பாலும் திரைத் துறையிலேயே மீண்டும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். சிலர் மட்டும் விதிவிலக்காக நம்மோடு இந்தத் துறை போதும் என்று வாரிசுகளை டாக்டர், பிஸினஸ், இன்ஜினியர் என்று மற்ற தொழில்களில் அவர்களை ஈடுபடுத்தி விடுகின்றனர். அப்படியாக பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனன் வாரிசான லதா மோகன் தந்தையைப் போல இசைத்துறையில் ஈடுபடாமல் பிசினஸில் இறங்கி இன்று கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பியூட்டி பார்லர் துறையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கியவர் தான் இந்த லதா மோகன். `ஸ்பலான் இண்டியா பிரைவேட் லிமிடெட்’ என்ற தன் நிறுவனத்தின் கீழ், இருபாலருக்குமான 50-க்கும் மேற்பட்ட பியூட்டி பார்லர்களை நடத்திவருகிறார். கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதலாளியான லதா மோகன், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறார்.

நடிகை ஸ்ரீ பிரியாவின் நெருங்கிய தோழியான லதா மோகன் தன்னுடைய முதல் மற்றும் மூன்றாவது பியூட்டி பார்லரை ஸ்ரீபிரியாவையே சிறப்பு விருந்தினராக அழைத்துத் திறந்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் ‘கன்யா‘ என்ற பெயரில் 1981-ல் தனது முதல் பார்லரைத் திறந்த இவர் தன்னுடைய தொழில் திறமையால் இன்று பல கிளைகளுக்கு முதலாளியாக உள்ளார்.

21 நாட்களாக தவித்த எம்.எஸ்.வி, கண்ணதாசனுக்கு சிவாஜி கொடுத்த க்ளு.. ‘எங்கே நிம்மதி..‘ பாடல் உருவான விதம்

லதா மோகனின் தந்தை எம்.எஸ்.வி ஆரம்பத்தில் இது சரிபட்டு வருமா என்று சந்தேகத்தில் கேட்ட போது அதெல்லாம் சரியா வரும் என்று தந்தைக்கு நம்பிக்கை கொடுத்து இதில் இறங்கியுள்ளார். பின் அதில் வெற்றி பெற்ற போது அதுகுறித்து லதா மோகன் கூறுகையில் “என் பிசினஸ் வெற்றிகரமா போனதில் அதிக சந்தோஷப்பட்டவரும் என் அப்பாதான். பிற்காலத்தில், `நீ பல குடும்பங்களுக்குச் சாப்பாடு போடுறே. நல்ல காரியம் பண்ணேம்மா! என் பேச்சை மீறி பிசினஸை தொடங்கினது நல்லதுதாம்மா’னு உருக்கமாகப் பேசினார் அப்பா.

படிப்பை முடிச்சுட்டு, என் மகன் விக்ரம் மோகனும் என்னுடைய தொழிலுக்கே வந்தான். அப்போ, `என்னம்மா… என் பேரன் வெளிநாட்டுல படிச்சுட்டு, சலூன் பிசினஸ் பண்றேன்னு சொல்றான். இது சரியா வருமா?’னு அப்பா என்கிட்ட கேட்டார். `சரியா வரும்பா’னு சொன்னேன்.

அப்பாவை ஒருமுறை எங்க சலூனுக்கு வரவெச்சு, அவருக்கு முடிவெட்டிவிட்டான் என் மகன். மேலும், முதல் முறையாக அப்பாவுக்கு பெடிக்யூர் செய்துவிட, அவர் நெகிழ்ந்துபோயிட்டார்.” என்று கூறினார். மேலும் இந்தத் தொழில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா என்று ஆச்சர்யப்பட்டுப் போனாராம் எம்.எஸ்.வி. இன்று லதா மோகனின் நிறுவனம் வெளிநாடுகளிலும் பரந்து விரிந்து அழகுக் கலையில் நம்.1 நிறுவனமாகத் திகழ்கிறது. பல வி.வி.ஐ.பி-க்களும் இவர்களது வாடிக்கையாளர்களாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews