அஸ்தமனமாகும் சென்னை உதயம் தியேட்டர்.. முடிவுக்கு வரும் 40 ஆண்டு திரைப் பயணம்

வானொலிக்கு அடுத்தபடியாக ஒரு காலத்தில் மக்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருந்தவை மேடை நாடகங்கள். மேடை நாடகங்கள் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று சினிமாவாக உயர்ந்தது. அந்த காலத்தில் கீற்றுக் கொட்டகைகளிலும், டூரிங் டாக்கீஸ்களிலும் சினிமா பார்த்து வளர்ந்தவர்கள் 90-களின் முற்பகுதியில் பிறந்தவர்கள். தங்கள் அபிமான நட்சத்திரம் நடித்த படங்களை முதல் காட்சியிலேயே கண்டு மகிழ்ந்து தியேட்டரில் விசில் சத்தமும், கைதட்டலுமாக ஆராவாரமாகப் பார்த்து ரசித்தனர். ஆனால் கால மாற்றம் ஏற்பட்டது.

வானொலிப் பெட்டிகள் பன்பலை ரேடியாக்களாக டிஜிட்டலுக்கு மாறின. அதேபோல் திரைப்படங்களும் டிவிக்களிலும் போட ஆரம்பித்ததால் தியேட்டர்களுக்கு ரசிகர்களின் வருகை குறைய ஆரம்பித்தது. மேலும் நிறைய தியேட்டர்கள் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களாக மாறியமையால் பழங்கால தியேட்டர்கள் திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களாகவும் மாறியது.

தற்போது சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய உதயம் தியேட்டரும் மூடுவிழா காண உள்ளது. சினிமா ரசிகர்களின் கோவிலாக விளங்கிய உதயம் தியேட்டர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. சென்னை அசோக் பில்லர் சந்திப்பில் உள்ள இந்த தியேட்டர் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்தது. 1983-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கு வளாகத்தில், உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என 4 திரையரங்குகள் உள்ளன. இந்த திரையரங்கை கடந்த 2009-ம் ஆண்டு தான் இதன் உரிமையாளர்களில் ஒருவராக பரமசிவம் பிள்ளை ரூ80 கோடிக்கு விலைக்கு வாங்கினார்.

வாடா ஓட்டவாய் நாராயணா.. ஒரே காமெடியில் ஒரே ஒரு காட்சியில் நடித்து புகழ் பெற்ற நடிகர்.. உதவிய ஜெயலலிதா

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகிய முன்னணி நாயகர்களின் பல படங்கள் இங்கு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகின. பல படங்கள் 100 நாட்களைக் கடந்தும் இங்கு ஓடிய வரலாறு உண்டு. முதல் மரியாதை, பூவே பூச்சூடவா, சிந்து பைரவி, ரோஜா, புன்னகை மன்னன் என பல படங்கள் இங்கு வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்தன.

இந்நிலையில் உதயம் திரையரங்குக்கு அருகில், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வந்துவிட்ட நிலையில், உதயம் திரையரங்கின் மவுசு குறைந்து கொண்டே வந்தது. அதேபோல் இந்த திரையரங்குக்கு அருகில் மால்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் சார்பில், 22 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் சதுர அடி கொண்ட இந்த இடத்தில், 24 ஆயிரம் சதுர அடி மாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் இடத்தில் அரசின் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

உதயம் தியேட்டரில் ரசிகர்களின் வருகை குறைவு காரணமாக தியேட்டரை மூடலாம் என அதன் உரிமையாளர்கள் தற்போது முடிவு செய்துள்ளனர். இந்த இடத்தில் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்டவை வர உள்ளதாகத் தெரிகிறது. இதனை பிரபல கட்டுமான நிறுவனமான காசாகிராண்ட் வாங்கியள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஓடிடி வருகையால் சினிமா தியேட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. அண்மையில் நடிகர் சிவாஜி கணேசனின் சாந்தி தியேட்டரும் மூடுவிழா கண்டது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews