ஆங்கிலேயரை ஓட ஓட விரட்டி அடித்தவர் பாஞ்சாலங்குறிச்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன்.
இவரது வரலாற்றை பள்ளிப்பாடப்புத்தகத்தில் தான் நாம் படித்துள்ளோம் வீரபாண்டிய கட்டபொம்மனை நேரில் பார்த்தது இல்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் மூலமே கட்டபொம்மன் இப்படித்தான் இருப்பாரோ என நினைத்துக்கொண்டவர். அந்த அளவு கட்டபொம்மனை கண் முன் கொண்டு வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இப்படத்தில் இடம்பெற்ற வானம் பொழிகிறது பூமி விளைகிறது என்ற வசனத்தை உண்மையில் கட்டபொம்மன் பேசினாரா என தெரியாது. ஆனால் இந்த சம்பவம் இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடந்த உண்மையான சம்பவம். இங்குள்ள இராமலிங்க விலாசத்தில் ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மனுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் வரி கொடுக்க முடியாது என வீரபாண்டிய கட்டபொம்மன் கூறியதை சுவாரஸ்யத்துக்காக வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி என்ற வசனத்துடன் காட்சியாக்கப்பட்டது.
இன்றுவரை இது புகழ்பெற்ற காட்சியாக ரசிகர்கள் மனதில் நீங்காமல் உள்ளது. 1959 மே 16ல் வெளிவந்த இப்படம் நேற்று முன் தினத்துடன் 61ம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததை சிவாஜி ரசிகர்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருகிறார்கள்.
புகழ்பெற்ற இப்படத்தை அந்தக்கால கேவா கலரில் இயக்குனர் பி.ஆர் பந்துலு இயக்கி இருந்தார். தயாரிப்பாளரும் இவரே. இப்படத்துக்கு அந்தக்கால புகழ்பெற்ற ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார்.
பாடல்களும் இப்படத்தில் அதிக அளவில் இடம்பெற்றிருந்தது. நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத காவியங்களில் இப்படமும் ஒன்று.