விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை.. விருது வாங்கிய மாணவியின் தாய் கடும் எதிர்ப்பு

சென்னை: விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்கு நீட் வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். இவ்வாறு அந்த கூட்டத்தில் விருது வாங்கிய மாணவியின் தாயார் அளித்த பேட்டி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. முதற்கட்டமாக கடந்த ஜூன் 28ம் தேதி நடந்த நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் நேற்று (ஜூலை 3) விழா நடந்து முடிந்தது. இந்த விழாவிலும் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், புதுச்சேரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், திருவாரூர், திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகளிலிருந்து முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நேற்று விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 740 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் பங்கேற்றார்கள்.

இந்த விழாவில் நடிகர் விஜய் நேற்று பேசுகையில். “நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எனது கருத்து. “ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு என்பதை அடிப்படையில் கல்வி கற்றலுக்கே எதிரான விஷயமாக நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல.

மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஆர்டி பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் சமமாக எழுத முடியும். அதுவும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை எழுதுவது என்பதை நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

நீட் தேர்வு குளறுபடிகள் பற்றி நாம் நிறைய செய்திகளை பார்த்தோம். அதன்மூலம் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே மக்களுக்குப் போய்விட்டது. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் ஊடகச் செய்திகள் மூலமாக நாம் புரிந்து கொண்ட விஷயமாக இருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு நீட் விலக்கு மட்டுமே. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டப்பேரவை தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். மத்திய அரசு இதன் மீது காலதாமதம் செய்யாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நீட் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன். ஒருவேளை அதில் நடைமுறை சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் கொண்டு வந்து சிறப்புப் பொதுப் பட்டியலை உருவாக்கி, அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தைச் சேர்க்க வேண்டும். மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் சிறப்புப் பொதுப் பட்டியலை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான வேண்டுகோள்” இவ்வாறு கூறியிருந்தார்.

விஜய்யின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிதுள்ளார், அந்த விழாவில் கலந்து கொண்ட மாணவியின் தாய் பேட்டி ஒன்றில் கூறும் போது, விஜய் சொல்வது போல் உலகம் மிகவும் பெரியது என்பது உண்மை. அதில் நீட் மட்டுமே வாழ்க்கை கிடையாது. மருத்துவம்தான் படிக்க வேண்டும் என்றில்லை. எத்தனையோ துறைகளில் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கின்றன.

எல்லா துறைகளிலுமே நாம் முன்னேறி வரலாம். எடுத்த துறைகளில் யார் 100 சதவீதம் உழைப்பை கொடுக்கிறார்களோ அவர்கள் முன்னேற்றம் அடைகிறார்கள் . நீட் நீட் என்று கூறி அதன் மீது மாயையை உருவாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். நீட்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கிறது . அது பற்றி யாருக்கும் தெரிவதில்லை.

என் கணவருரே ஒரு டாக்டர் தான். எனினும் விஜய் நீட் தேர்வு பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்கு நீட் வேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம் என்று விஜய் வழங்கிய விருதை வாங்கிய மாணவியின் தாயார் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...