இந்தியா செமி போறது உறுதி.. சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா இருந்தும் இந்தியாவுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்..

டி20 உலக கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி மூன்று போட்டிகளை ஆடி முடித்துள்ள நிலையில் அனைத்திலும் வெற்றி கண்டு எப்படியோ சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அமெரிக்கா மைதானங்கள் டி20 உலக கோப்பையை முன்னிட்டு தயார் செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் நியூயார்க் மைதானம் மிக மோசமான பேட்டிங் பிட்ச்சாகவும் அமைந்திருந்தது.

உலகின் எப்படிப்பட்ட கிரிக்கெட் பேட்ஸ்மேனாக இருந்தாலும் இங்கே ரன் அடிக்க முடியாத ஒரு சூழல் தான் தொடர்ந்து இருந்து வருவதால் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கும் அதே சூழ்நிலை தான் உருவாகி இருந்தது. கோலி, ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட அனைத்து பேட்ஸ்மேன்களும் நியூயார்க் மைதானத்தில் ரன் சேர்க்கவே திணற மூன்று போட்டிகளும் இந்திய அணிக்கு அங்கே இக்கட்டான ஒரு நேரம் தான் பேட்டிங்கில் அமைந்தது.

அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளை நியூயார்க் மைதானத்தில் சந்தித்திருந்த இந்திய அணி மூன்று போட்டிகளிலும் பந்துவீச்சின் காரணமாக தான் வெற்றிகளை குவித்திருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்றிருந்த நிலையில் மூன்றாவது போட்டியில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றிருந்தார்.

இப்படி பந்து வீச்சாளர்களையே லீக் போட்டிகளில் பெரிதாக நம்பி இருந்த இந்திய அணி தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில், பேட்டிங்கில் உள்ள குழப்பங்கள் எல்லாம் நிவர்த்தி செய்து அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வழிகளையும் முயற்சி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருக்கையில் சூப்பர் 8 சுற்று இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு நான்கு அணிகள் வீதம் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது குரூப் ஒன்றிற்கு முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், குரூப் 2வில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முன்னேறி உள்ளது.

2 குழுவிலும் இன்னும் தலா இரண்டு அணிகள் வீதம் இணைய இருக்கும் நிலையில் அதில் இந்திய அணியின் பிரிவில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளில் இரண்டு தேர்வாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிகிறது. இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுக்கான சூப்பர் 8 வாய்ப்பு மிக மிக குறைவாக இருக்கும் நிலையில் சிறிய அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் காணுவார்கள் என தெரிகிறது.

அப்படி நடைபெறும் பட்சத்தில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவை தவிர மற்ற இரண்டு அணிகளும் நிச்சயம் அந்த அளவுக்கு சவாலாக இருக்காது என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே வேளையில் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தியுள்ள ஆப்கானிஸ்தான், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறினால் இந்திய அணிக்கு ஒருவேளை அவர்கள் குடைச்சல் கொடுக்கவும் வாய்ப்புள்ளது.

அவற்றை எல்லாம் நிச்சயம் பலம் வாய்ந்த இந்திய அணி வீரர்கள் சமாளித்து எளிதாக அரையிறுதி முன்னேற ஒரு அருமையான வாய்ப்பு உருவாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...